//]]>3

புதன், 11 ஏப்ரல், 2012

இந்து சமுத்திர வலயத்திற்கு விடுக்கப்பட்டிருந்த சுனாமி எச்சரிக்கை நீக்கம்




இலங்கை உள்ளிட்ட இந்து சமுத்திர வலயத்திற்கு விடுக்கப்பட்டிருந்த சுனாமி எச்சரிக்கை நீக்கப்பட்டுள்ளதாக அமெரிக்க பசுபிக் சுனாமி எச்சரிக்கை நிலையம்  அறிவித்துள்ளது.
சுனாமி அனர்த்தம் சற்று முன்னர் தளர்த்தப்பட்டுள்ளதாக வளிமண்டலவியல் திணைக்களமும் தெரிவித்துள்ளது. பாதுகாப்பான சூழ்நிலை தற்போது காணப்படுவதால் மக்கள் தமது இருப்பிடங்களுக்கு மீள திரும்ப முடியும் என்று இலங்கை வளிமண்டலவியல் திணைக்களத்தின் பணிப்பாளர்  நாயகம் எஸ்.எச்.காரியவசம் தெரிவித்துள்ளார்.

சுனாமி எச்சரிக்கை எரிபொருளுக்கு மக்கள் திண்டாட்டம்






இந்தோனேசியாவில் ஏற்பட்ட நிலநடுக்கத்தையடுத்து கல்முனை பிரதேசத்திலுள்ள எரிபொருள் நிரப்பு நிலையங்களில் தமக்கு தேவையான எரிபொருட்களைப் பெற்றுக்கொள்வதற்காக பொதுமக்கள் நீண்ட நேரமாக வரிசையில் காத்து நின்றனர். 

சுனாமி எச்சரிக்கையையடுத்து மின்சாரமும் துண்டிக்கப்பட்டுள்ளது. தமிழ் சிங்கள புதுவருடத்தை சிறப்பாக கொண்டாடும் வகையில் ஆடைகள் மற்றும் பொருட்கள் கொள்வனவு செய்வதில் ஆர்வத்துடன் ஈடுபட்டிருந்த மக்கள் கூட்டம் மின்னல் வேகத்தில் கலைந்து சென்றதன் காரணமாக நகர் பிரதேசத்திலுள்ள ஜவுளிக்ககைள் வெறிச்சோடிக்கிடப்பதைக் காணக்கூடியதாகவுள்ளது. கடற்கரைப் பிரதேசத்தை அண்டிய பிரதேசங்களில் வசித்த மக்கள் பிரதான வீதிகளில் கூட்டம்கூட்டமாக நிற்பதையும் அவதானிக்கக் கூடியதாகவுள்ளது. 

மட்டக்களப்பில் மக்கள் ஓட்டம்




சுனாமி எச்சரிக்கை காரணமாக மட்டக்களப்பு மாவட்டத்தின் அனைத்து கரையோரப்பகுதிகளிலும் இருந்து மக்கள் வெளியேற்றப்பட்டு வருகின்றனர். 

மட்டக்களப்பு மாவட்டத்தின் கரையோரப்பகுதியில் உள்ள அனைத்து பிரதேச செயலகத்துக்கும் உட்பட்ட பகுதி மக்கள் தமது உடமைகளை எடுத்துக்கொண்டு பாதுகாப்பான இடங்களை நோக்கி சென்றனர். 

மட்டக்களப்பு மாவட்டத்தில் உள்ள படை மற்றும் பொலிஸார் மக்களை பாதுகாப்பான இடங்களை நோக்கி நகர்த்துவதில் ஈடுபட்டுவருகின்றனர். 

மட்டக்களப்பு நகரை அண்டிய பகுதிகளில் உள்ள மக்கள் பெருமளவு இடம்பெயர்ந்து மட்டக்களப்பு நகரை நோக்கி வந்துகொண்டிருக்கின்றனர். 

இதேபோன்று கடற்கரை அண்டிய பகுதிகளில் கடலினை பார்ப்பதற்காக செல்வோரை பொலிஸார் தடுத்துவருகின்றனர். கடந்த சுனாமி வேளையிலும் கடற்கரையை பார்வையிட சென்றோரே அதிகமாக உயிரிழந்ததையும் பொலிஸார் நினைவுபடுத்தி வருகின்றனர். 

அத்துடன் மட்டக்களப்பு கல்லடி,நாவலடி பிரதேசத்தில் உள்ள மக்களை ஆற்றின் ஊடாக இயந்திர படகுககள் மூலம் அப்புறப்படுத்தும் நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்பட்டுவருகின்றன. 

கடல் உள்வாங்கியது

தென் மாகாணத்தில் கிரிந்த பகுதியில் கடல் உள்வாங்கியதாக மீன்பிடி மற்றும் நீரியல் வள அமைச்சர் ராஜித சேனாரத்த தெரிவித்துள்ளார். எனினும் அப்பகுதி மக்கள் அச்சம் கொள்ள தேவையில்லை எனவும் அமைச்சர் சுட்டிக்காட்டியுள்ளார்


ஆடுகளுக்கு ஓட்டப்பந்தயம்





பல்வேறு பந்தயங்களில் கலந்து கொள்வதில் மனிதர்களே பெரும்பாலும் ஈடுபடுவதுண்டு. தற்போது காணப்படும் மக்கள் தான் வளர்க்கும் செல்லப்பிராணிகளையும் பல்வேறு பந்தயங்களில் ஈடுபடுத்துகின்றனர்.
அவ்வாறு தெற்கு கரீபியன் கடல்பகுதியில் தொபாகோ தீவில் திருவிழாவின் போது ஆடுகள் ஓட்டப்பந்தயம் நடத்துவது வழக்கம். இதில் பங்கேற்ற ஆடுகளை துரத்தியபடி, அதன் உரிமையாளர்களும் ஓடுவதைப் படத்தில் காணலாம்.

நீர்வேலி, அத்தியடி பகுதியில் மதில்களை உடைத்து தனியார் பஸ்


யாழ்ப்பாணம் நோக்கி வந்து கொண்டிருந்த தனியார் பஸ் ஒன்று வேகக்கட்டுப்பாட்டை இழந்து வீட்டின் மதில்களை உடைத்துக்கொண்டு சென்ற சம்பவம் ஒன்று இன்று மாலை இடம்பெற்றுள்ளது.
இச்சம்பவம் இன்று மாலை 6 மணியளவில் நீர்வேலி, அத்தியடி பகுதியில் இடம்பெற்றுள்ளது.
வடமராட்சி பகுதியிலிருந்து யாழ்ப்பாணம் நோக்கி வந்த மேற்படி பஸ் தனது வேகக்கட்டப்பாட்டை இழந்து வீடொன்றின் முன்பக்க சுவரை இடித்து தள்ளிக்கொண்டு உள்ளே சென்றுள்ளது.
இச்சம்பவத்தில் சேதவிபரங்கள் தெரியவரவில்லை. சம்பவம் தொடர்பான விசாரணைகளை கோப்பாய பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

செவ்வாயில் யானையாம்



செவ்வாயில் யானை போன்ற ஒரு உருவம் உள்ளதாக செயற்கைக் கோள் மூலம் எடுக்கப்பட்ட படத்தால் சர்ச்சை ஏற்பட்டுள்ளது.

சிவப்புக் கிரகம் என அழைக்கப்படும் செவ்வாய்க் கிரகத்தில் யானை போன்ற ஒரு உருவம் பாறை ஒன்றில் பதிவாகியுள்ளது.
செவ்வாயிலிருந்து செயற்கைக் கோள் மூலம் படம் பிடிக்கப்பட்டு பூமிக்கு அனுப்பப்பட்ட 22,000 படங்களில் இருந்து மேற்படி அதிசய படம் தேர்ந்து எடுக்கப்பட்டுள்ளது.
குறித்த படம் தொடர்பாக Arizona planetary பல்கலைக்கழகத்தின் புவியியலாளரான Alfred McEwen கருத்துத் தெரிவிக்கையில்,
ஆயிரம் ஆயிரம் தசாப்தங்களுக்கு முன்னர் பூமியில் ஏற்பட்ட மாபெரும் வெள்ளப் பெருக்கு மற்றும் எரிமலை போன்றவற்றால் தான் இப்படியான நிலை உருவானது.
அங்கு எரிமலைக் குழம்பு இருப்பதற்கு பல ஆயிரம் ஆண்டுகளுக்கு முன் நடந்த நிகழ்வுகளும் காரணமாக இருக்கலாம்.
பூமியப் போன்ற ஒரு நிலை இருந்ததால் அங்கு யானைகள் இருப்பதற்கான வாய்ப்பும் உள்ளது.

சாஜஹானை ஏமாற்றிய மும்தாஜ்



ஒரு தடவை மன்னன் சாஜஹானுக்கு காணிக்கை கொண்டு வந்த குழுவில் ஓர் அழகிய இளம் பெண் இருந்தாள். அவள் அப்படியே ஜொலித்தாள். அவள் அணிந்திருந்த வைரமணிகள் கூட சாஜஹானைக் கவர்ந்தன. மன்னரின் பொழுதுபோக்கு நவரத்தினங்களை எடை போட்டு ஆய்வது.

அவள் கொண்டுவந்த காணிக்கையோ வைரமணிகள். அவை தன் கருவூலத்திலில்லாத வேலைப்பாடமைந்த, பட்டை தீட்டிய வைரமணிகள் ஆகும். அரசர் மற்றவர்களை விரைவாக அனுப்பி விட்டு அவளிடம் தனியாகப் பேசி காணிக்கையை ஆசையுடன் பெற்று வழியனுப்பினார். 

சிறிது நேரத்தில் வைரங்களை எறும்புகள் மொய்த்திருந்தன. எல்லாம் இனிப்புகள். தான் ஏமாந்ததை சாஜஹான் உணர்ந்தாலும் அந்தப் பெண்ணின் குறும்புத்தனத்தையும் வேலைத் திறனையும் மெச்சி அவள் மேல் காதல் கொண்டார். அந்த அழகிதான் மும்தாஜ்.

சாஜஹானின் மனைவியன் பெயர்கள் என்ன? சாஜஹானின் மனைவி மும்தாஜ் எவ்வாறு இறந்தார்? 
மூன்று மனைவிகள் ஷாஜஹானுக்கு அதில் முதலாமவர் அக்பர்பாடி மஹால் அடுத்தவர் கண்டாரி மஹால் மூன்றாமவர்தான் மும்தாஜ் மஹால். 

1631ஆம் ஆண்டு ஜூன் மாதம் ஏழாம் திகதி அகமத் நகர், பீஜப்பூர் சுல்தான்களையும் வழிக்குக் கொண்டுவருவதற்காக மத்திய இந்தியாவுக்குப் படையோடு ஷாஜஹான் சென்றிருந்தபோது, மும்தாஜ் பதினாலாவது குழந்தையைப் பெற்றெடுத்தார். பிரசவம் முடிந்த கையோடு மும்தாஜுக்குத் திடீரென்று ஜன்னி பிறந்தது. 

ஷாஜகானுக்கு தகவல் சொல்லப்பட் டது. பதறிப்போய் ஓடிவந்தார் ஷாஜகான். அருமை மனைவியை அழுதபடி வாரி மடியில் இருந்திக்கொண்டார். 

சில நிமிடங்கள் கணவன் கரத்தை இறுகப் பற்றிக்கொண்டிருந்த மும்தாஜின் தலை சாய்ந்தது. அன்பு மனைவியின் பிரிவைத் தாக்கமுடியாமல் துவண்டுபோனார் மன்னர். அந்த அன்புக்காக உளிச்சத்தங்களால் அறிவிக்கப்பட்ட வெள்ளை மௌனம்தான் அந்த தாஜ்மஹால். 

உலக வரலாற்றில் தாஜ்மஹாலைப் போல் ஒரு இனிய கல்லறை இன்னும் எத்தனை ஜென்மங்களிலும் உதயமாகப் போவதில்லை. மும்தாஜ் எனும் அழகிய மனைவியின் மீது ஷாஜகான் வைத்திருந்த நேசத்தின் கலை வடிவம் அது. 


வாழ்வில் ஒரு முறையாவது காண வேண்டிய அந்த கலை மிகு கட்டிடம் எழுந்த கதை பெருங்கதை. தட்சிணப் பிரதேசம் பர்ஹான்பூர் என்ற ஊரில்தான் முதன் முதலாக மும்தாஜின் உடல் புதைக்கப்பட்டது. 

இதற்குப் பின் ஆறு மாதம் கழித்து அவரது உடல் ஊர்வலமாக எடுத்து வரப்பட்டு ஆக்ராவில் இப்போது தாஜ்மஹால் உள்ள இடத்தில் புதைக்கப்பட்டது. 
மும்தாஜ் இறந்து சரியாக ஒரு வருடம் கழித்து ஷாஜஹான் களத்தில் இறங்கினார். 

வெனிஸ் நகரத்து வெரோனியா, துருக்கி நாட்டு உஸ்தாக் இசா அபாண்டி, லாகூரைச் சேர்ந்த அகமத் எனப் பலரும் வந்திருந்து ஷாஜகானும், கூட்டுச் சேர்ந்து அமைத்த மொத்த வடிவமே இன்றைய தாஜ்மஹால். 

அடுத்த கட்டமாக கட்டிடக் கலைஞர்கள், சிற்பிகள், கொத்தனார்கள் என இருபதாயிரம் பேர் வேலைக்கு தேர்வு செய்யப்பட்டு மள மளவென பணிகளைத் தொடங்கினார் ஷாஜஹான். 

1632- ம் ஆண்டு வேலைத் தொடங்கி 1652 வரை சுமார் 20 ஆண்டு கால உழைப்பின் சின்னம்தான் இந்த தாஜ்மஹால்ஸ. அதற்குப் பிறகு கூட ஒரு ஆண்டுக்கு வெளியேயுள்ள சுற்றுப் புறத்தில் மிக நுண்ணிய வேலைகள் நடந்தன. தாஜ்மஹாலைச் சுற்றி 42 மீட்டர் உயரத்திற்கு நிற்கும் 4 மினார்களும் (தூண்) லேசாக வெளிப்புறம் சாய்த்து வைத்து கட்டியிரிக்கிரார்கள். காரணம் ஏதேனும் அசம்பாவிதத்தில் அந்த தூண்கள் விழுந்தால் கூட தாஜ்மஹால் மீது பட்டுவிடக் கூடாதே என்ற காரணுத்துக்காகத்தான். 

தாஜ்மஹாலின் வெளிப்புறக் கதவுகள், சுவர்களில் பதிக்க இந்தியாவைத் தவிர ரஷியா, திபெத், பாரசீகம் என பல இடங்களில் இருந்தும் வைரம், வைடூரியம், முத்து, பவளம் என பல விதம் விதமாக வரவழைத்து பயன்படுத்தி அழகு பார்த்தார் ஷாஜஹான். 

புனித குரானிலிருந்து குறிப்பிட்ட வாசகங்களை தேர்ந்தெடுத்து அவற்றை கல்லறையைச் சுற்றிலும் உள்ள சுவர்களில் பொறிப்பது என்று முடிவு செய்தார். இதற்காக உலகிலேயே மிகத் திறமையான பாரசீக கலைஞர் ‘அமானாத்கான்’ பெயர் சிபாரிசுச் செய்யப்பட்டது. 

‘நான் எந்த வேலைச் செய்தாலும் அதில் என் கையெழுத்தைப் போடுவேன் என்று அடம்பிடித்த அவரை ‘சரிஸகையெழுத்து போட்டுக்கொள்ளுங்கள்’ என்று அனுமதிக் கொடுத்து வரவழைத்தார் ஷாஜஹான். இன்றைக்கும் அந்தச் சிற்பியின் கையழுத்தைக் காணலாம். தாஜ்மகாலில் இவரது கையழுத்தைத் தவிர வேறு எவரின் பெயரும் கிடையாது. 

இப்படி அங்குலம் அங்குலமாக பொன் நகையை உருவாக்குவது போல் கட்டினார் ஷாஜஹான். தாஜ்மஹால் கட்டி முடிக்கப்பட்டு கொஞ்சம் காலம் முஸ்லீம்கள் மட்டுமே பார்க்க அனுமதிக்கப்பட்டனர். 

பிற்பாடு உலகெங்கிலும் இருந்து பலர் வர வர அந்தத் தடை தானாகவே நீங்கிப் போனது. இத்தகைய அழகான தாஜ்மகால் அதன்பிறகு வந்த ஆங்கிலேயெர்களின் கண்களை பறிக்காமல் இருக்குமா? 

பல ஆங்கில அதிகாரிகள் சுவர்களில் பதிக்கப் பட்ட வைர, வைடூரியங்களை சுரண்டி எடுத்துக் கொண்டு போனார்கள். லார்டு வில்லியம் பெண்டிங் என்பவர் இடித்து விடலாம் என்று ஐடியா கொடுத்தார். இன்னும் பல ஆங்கிலேய அதிகாரிகள் தாஜ்மகாலை ஒவ்வொரு கல்லாக பெயெர்தெடுத்து, கப்பலில் ஏற்றிக் கொண்டு போய், இங்கிலாந்தில் இறக்கி மீண்டும் செட்டப் செய்து விடலாம் என்று ஆலோசனை வழங்கினார். 

இறைவனின் கருணையால்ஸ இன்றைக்கும் இப்படியொரு அற்புதக் கட்டிடம் இந்தியாவில் இருக்கிறதென்றால் அதற்குக் காரணம் அப்போது வைஸ்ராயாக இருந்த கர்சன் பிரபுஸ 

கலைஞர்களின்பால் மிகுந்த ஆர்வமும், ஆசையும் கொண்டிருந்த அவர் மற்றவர்களின் யோசனையை தூரத் தூக்கி எறிந்துவிட்டு தாஜ்மஹாலை நல்ல முறையில் பராமரிக்க ஒரு சட்டமே இயற்றினார். அதோடு மட்டுமல்ல.. இப்போது நீங்கள் தாஜ்மஹாலுக்குப் போனால் மும்தாஜ் – ஷாஜஹான் கல்லறைகளுக்கு மத்தியில் மேலே ஸ ஒரு அழகான பித்தளை விளக்கு தொங்கிக் கொண்டிருக்கும். 

இதனைக் கொய்ரோவிலுருந்து வாங்கி, இங்கு தொங்கவிட்டவரே இந்த கர்சன் பிரபுதான். 

இந்த தாஜ்மஹால் கட்டுவதற்கு 1000 யானைகளும், 40000 பணியாளர்களும் வேலை செய்யப்பட்டனர். 

மும்தாஜின் கடைசி நாள்: 

மும்தாஜுக்கு மொத்தம் 13 குழந்தைகள் (1613- 1631) க் குள் இந்தக் குழந்தைகளைப் பெற்றெடுத்தாள். இதில் 7 குழந்தைகள் மிக சிறுவயதிலேயே இறந்து போனது. உயிருடன் தாரா, சூசா, அவுரங்கசீப், மூரத் ஆகிய 4 ஆண் குழந்தைகளும் சாகனார, ரோனார, கவுஷனாரா ஆகிய 3 பெண் குழந்தைகளும் இருந்தார்கள். இதில கடைசிப் பெண்ணான கவுஷனாராவைப் பெற்றுடுக்கும்போதுதான் பிரசவ வலி தாள மாட்டாமல் 07-06-1631 ல் மும்தாஜ் இறந்துபோனாள்.

தாஜ்மஹால் உண்மை ரகசியம்: (காதலின் சின்னம்)

தாஜ் மஹால் ஷாஜஹானால் கட்டப் பட்டது கிடையாது. அது அவர் ஒரு ராஜ்புட் அரசரிடமிருந்து (ஜெய் சிங்) பிடுங்கியது. மும்தாஜுக்காக ஷாஜஹான் தாஜ் மஹாலைக் கட்டியாதக் கூறப்படுவது உலக மஹா டகால்டி. 

இப்ப விஷயத்துக்கு வருவோம். 

தாஜ் மஹால்ல் விஷயத்தில் உலகம் முழுவது ஏமாற்றப் பட்டுள்ளது. தாஜ் மஹால் மும்தாஜின் சமாதி அல்ல அது ஒரு புராதான சிவன் கோயில் என்று பேராசிரியர் பி. என். ஓக் குறிப்பிடுகிறார். முன் காலத்தில் தாஜ் மஹால் “தேஜோ மஹாலயா” என்ற பெயரால் அழைக்கப் பெற்றது என்கிறார். நம்ம ஷாஜஹான் ராஜ்புட் அரசர் ஜெய் சிங் கிட்டேர்ந்து இந்த பெரிய பில்டிங்கை ஆட்டைய போட்டதா சொல்றார். அது மட்டுமின்றி ஷாஜஹான் தன் சொந்த குறிப்புகளில் (பாத்ஷாநாமா) “ஆக்ராவில் மிகவும் அழகான ஒரு மாளிகை தனை ஆட்டையைப் போட்ட விவரத்தைக் குறித்து வைத்துள்ளார்”. எனினும் அது தான் தாஜ் மஹால் என அவர் எழுதவில்லை. 

முன்னால் ஜெய்பூர் மஹா ராஜாவின் குறிப்புகளில் ஷாஜஹான் ராஜ்புட் மன்னன் ஜெய் சிங்கிற்கு இது குறித்து அனுப்பிய இரண்டு ஆணைகள் இன்னும் பத்திரமாய் உள்ளன என்றும் கூறியுள்ளார். 

முகலாயர்கள் ஆண்ட காலத்தில் கோயில்களைலும் பெரிய மாளிகைகளைலும் இறந்த முகலாய மன்னர்களையும் ராணிகளையும் புதைப்பதை வழக்கமாய் கொண்டிருந்தனர் என்பது எல்லோரும் அறிந்ததே. உதாரணம். ஹுமாயுன், அக்பர், எத்மத் உத் தவுலா, சப்தர்ஜங் இவர்கள் அனைவரும் புதைக்கப் பட்டுள்ள இடங்கள் பெரிய மாளிகைகளே என்பது குறிப்பிடத் தக்கது. 

பேராசிரியர் ஓக் தன் விசாரணை தனை “தாஜ் மஹால்” எனும் பெயரிலிருந்து துவக்கினார். இது பற்றி அவர் “மஹால்” எனும் வார்த்தை அப்கானிஸ்தான் முதல் அல்ஜீரியா வரை எந்த ஒரு நாட்டிலும் வழக்கத்தில் இல்லை என்று குறிப்பிடுகிறார். வழக்கத்துக்கு மாறான இந்த “மஹால்” எனும் சொல் நிச்சயம் மும்தாஜ் மஹால் எனும் பெயரிலிருந்து வரவில்லை என்று உறுதியாய்க் கூறுகிறார். முதலாவதாய் மும்தாஜின் முழுப் பெயர் மும்தாஜ் உல் ஜமானி என்பதாகும். இரண்டாவதாய், “மும்தாஜ் என்ற பெயரின் முதல் மூன்று எழுத்துக்களை நீக்கி விட்டு “தாஜ்” என்ற பெயரைப் பெற்றிருப்பது சற்றே விசித்திரமானது என்றும் அவ்வாறு நடந்திருக்க வாய்ப்பில்லை என்றும் கூறுகிறார். மேலும் ஷாஜஹான் மும்தாஜின் காதல் கதை தாஜ் மஹால் விவகாரத்தை மறைக்க உருவாக்கப் பெற்ற ஒரு அம்புலிமாமா கதை என்கிறார். 

பல ஆண்டுகளுக்கு முன்னர் நியுயார்க்கை சேர்ந்த பேராசிரியர் மார்வின் மில்லர் தாஜ் மஹாலின் சில மாதிரிகளை எடுத்து கார்பன் டேட்டிங் முறைப் படி தாஜ் மஹாலின் ஆயுளை கணித்தார். அவர் கருத்துப் படி தாஜ் மஹாலின் வயது 300 ஆண்டுகளுக்கு மேல் பழமையானது என்று குறிப்பிட்டுள்ளார். 

ஆல்பர்ட் மாண்டேஸ்லோ என்பவர் 1638ஆம் ஆண்டு (மும்தாஜ் இறந்து ஏழு ஆண்டுகளுக்குப் பிறகு), ஆக்ரா வந்த்துள்ளார். அவருடைய குறிப்புகளில் தாஜ் மஹால் கட்டப் படுவதற்கான எந்த ஒரு குறிப்பும் இல்லை. மேலும் பீட்டர் மண்டி என்ற ஒரு ஆங்கிலேயர் மும்தாஜ் இறந்து ஒரு ஆண்டுக்குள் ஆக்ரா வந்த போது தன் குறிப்புகளில் இன்றைய தாஜ் மஹாலின் கலை நயம் பற்றி மிகவும் புகழ்ந்து எழுதியுள்ளார். வரலாறின் படி தாஜ் மஹால் மும்தாஜ் இறந்து 20 ஆண்டுகளுக்குப் பிறகு கட்டி முடிக்கப் பட்டது என்பது நினைவிருக்கட்டும். 

மேலும் பேராசிரியர் ஓக் அவர்கள் ஏகப்பட்ட கட்டிட நுணுக்கங்களை மையமாகக் கொண்டு அது ஒரு இந்துக் கோயில் என்று அடித்துக் கூறுகிறார். இன்றும் தாஜ் மஹாலின் பெரும் பகுதி பொது மக்களின் பார்வைக்கு திறந்து விடப்படுவதில்லை. அதன் காரணம் என்னவென்று கேட்ட எவருக்கும் கிடைக்கும் பதில் – “பாதுகாப்பு” எனும் ஒற்றை வார்த்தை தான். அது மட்டுமின்றி தாஜ் மஹாலினுள் தலையில்லாது ஒரு சிவன் சிலையும் இந்துக்கள் பூஜைக்குப் பயன் படுத்தும் பல பொருட்களும் உள்ளன என்றும் அவர் கூறுகிறார். 

அரசியல் காரணங்களார் திரு ஓக் அவர்களின் புத்தகம் இந்தியாவில் இந்திரா காந்தியால் தடை செய்யப்பட்டது. அவர் கூறுவதை உறுதிப் படுத்திக்கொள்ள ஐக்கிய நாடுகள் சபையின் தலைமையில் ஒரு தொல் பொருள் ஆய்வுக் குழு ஒன்றை உருவாக்கி அவர்கள் தாஜ் மஹாலை ஆய்வு செய்ய வகை செய்ய வேண்டும் என்றும் கூறுகிறார்.

குளிர்பானங்களினால் மாரடைப்பு ஏற்படும்



இனிப்பு கலந்த குளிர்பானத்தை தினமும் குடிப்பவர்களுக்கு மாரடைப்பு வருவதற்கான வாய்ப்புகள் அதிகம் என ஆய்வொன்றின் மூலம் தெரியவந்துள்ளது.
அமெரிக்காவை சேர்ந்த ஹார்வர்டு பல்கலைக்கழகம், குளிர்பானங்கள் குடிப்பதால் ஏற்படும் விளைவுகள் பற்றி ஆய்வு ஒன்றை மேற்கொண்டது.
கடந்த 22 ஆண்டுகளாக அமெரிக்கர்கள் 40 ஆயிரம் பேரிடம் இந்த ஆய்வை மேற்கொண்டது. இந்த ஆய்வில் ஆண்கள் மட்டுமே உட்படுத்தப்பட்டனர்.
ஆய்வின் முடிவுகள் சமீபத்தில் வெளியிடப்பட்டது. சர்குலேஷன் என்ற பத்திரிகையில் வெளியாகி உள்ள ஆய்வு அறிக்கையில் கூறப்பட்டு இருப்பதாவது, இனிப்பு கலந்த குளிர்பானத்தை தினமும் குடிப்பவர்களுக்கு மாரடைப்பு ஏற்படுவதற்கான வாய்ப்பு 20 சதவீதமும் அதிகரிக்கிறது.
அதேசமயம் வாரத்தில் இரண்டு நாள் அல்லது அதற்கு குறைவாக குளிர்பானம் எடுத்துக் கொள்ளும் நபர்களுக்கு மாரடைப்பு அபாயம் காணப்படவில்லை.
குளிர்பானங்களில் பயன்படுத்தப்படும் செயற்கை இனிப்பூட்டும் பொருள்களால் உடல்நலக்குறைவு ஆபத்து ஏற்படவும் வாய்ப்பு இல்லை. தொடர்ச்சியாக குளிர்பானம் பருகி வந்தால் மட்டுமே உடல் எடை அதிகரித்து, மாரடைப்பு ஏற்படும் நிலை வருகிறது.
குளிர்பானத்தில் கலக்கப்படும் சில ரசாயன கலவைகள் இதயத்துக்கு தீங்கு விளைவிக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

வேகமாக அகற்றப்படும் படைமுகாம்கள்!



வன்னிப் பெருநிலப்பரப்பில், பரந்தன் சந்தியிலிருந்து முல்லைத்தீவு நோக்கிச்செல்லும் பிரதான வீதியில் அமைந்திருந்த பிரதான இராணுவ முகாம்கள் நேற்று முன்தினம் தொடக்கம் அகற்றப்பட்டு வருவதாக அறியப்படுகிறது.

முரசுமோட்டைக்கு அண்மையாக அமைந்திருந்த முகாம், தருமபுரம் சந்தியில் அமையப்பெற்றிருந்த முகாம், சுண்டிக்குளம் சந்திக்கு அருகாமையிலுருந்த முகாம், விஸ்வமடு ரெட்பானா நகர் முகாம், ஆகிய முகாம்களே அகற்றப்பட்டிருக்கின்றன.

படையினரின் இத்திடீர் மாற்றம் குறித்து அச்சம் தெரிவித்துள்ள மக்கள்,  இம்முகாம்களை அகற்றிவிட்டு, பாரிய முகாம் ஏதேனும் அமைக்கும் திட்டத்தை படையினர் கொண்டள்ளனரா என சந்தேகம் தெரிவிப்பதாக அங்கிருந்து வரும் செய்திகள் தெரிவிக்கின்றன.

அமெரிக்க மற்றும், ஐ.நா பிரதிநிதிகள் விஜயம் காரணமாகவும், படைமுகாம்கள் வன்னியிலிருந்து அகற்றப்பட்டுவிட்டதாக மேற்குலகிற்கு இலங்கை அரசாங்கம் காட்டிக்கொள்வதற்காகவும் இந்நாடகம் நடாத்தப்படலாம் எனவும் மக்கள் விசனம் தெரிவித்தனர்.
ஜயத்தை மேற்கொள்ளவுள்ள, இந்திய நாடாளுமன்றக் குழு வட பகுதியை நேரில் பார்வையிட்டு தமிழ் மக்களின் நிலை குறித்து ஆராயவுள்ளது.

இதன் காரணமாகவே படையினர் தமது முகாம்களை அகற்றி தமது பிரசன்னம் மட்டுப்படுத்தப்பட்டதாகவே உள்ளது எனக் காட்டும் முகமாகச் செயற்படுவதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

கபடிப் விளையாடிய அஞ்சலி




ஈரோட்டில் நடந்த மாநில அளவிளான பெண்கள் கபடிப் போட்டியை நடிகை அஞ்சலி தொடங்கி வைத்து கபடி வீராங்கனைகளை உற்சாகப்படுத்தினார்
தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் இருந்து வந்திருந்த பெண்கள், கபடி அணியினர் அஞ்சலியை பார்த்ததும் மேலும் உற்சாகமாக விளையாட ஆரம்பித்தார்கள்.

.பைரவா கிரியேஷன்ஸ் மற்றும் ஜெயம் விஷன்ஸ் நிறுவனங்கள் சார்பில் நடத்தப்பட்ட இந்த கபடிப்போட்டி சுவையான ரியாலிடி ஷோவாக வாரம் இருமுறை ஜெயா தொலைக்காட்சியில் ஒளிபரப்பப்பட இருக்கிறது.

போட்டியில் சிலர் அஞ்சலியின் கையை பிடித்து கபடி ஆட அழைத்ததும் சற்றே பயந்த படி களத்தில் இறங்கினார் அஞ்சலி. ஆனால் அவரை பிடிக்கவோ தொடவோ எந்த வீராங்கனையும் முன்வரவில்லை. அவர்களின் ஒரே சந்தோஷம் அவ்வளவு பெரிய நடிகை நம்முடன் விளையாட சம்மதித்து கிரவுண்டில் இறங்கினாரே என்பது மட்டும் தான்.

இங்கும் அங்கும் "கபடி கபடி" என்று பாடியபடியே நாலுமுறை நடப்பதற்குள் மூச்சு வாங்கிய அஞ்சலி, ஆளை விடுங்க பொண்ணுங்களா என்ற படி ஓடிப்போய் அமர்ந்து கொண்டார்.

ஆனால் விளையாட்டில் ரொம்பவே ஆர்வம் காட்டிய அஞ்சலி, ஒரு நாள் முழுக்க கொளுத்தும் வெயிலையும் பொருட்படுத்தாமல் மைதானத்தில் அமர்ந்திருந்தது ஆச்சர்யம். ஒவ்வொரு கபடி வீராங்கனையையும் தனித்தனியாக அவர் உற்சாகப்படுத்தியதோடு அவர்களின் கேள்விகளுக்கும் பதில் அளித்தார்.

'எங்கேயும் எப்போதும்' படத்தில் கடுகடுன்னு இருந்தீங்க. ஆனால் நேரில் பார்க்கும்போது மலர்ச்சியா இருக்கீங்க. இனிமே அது மாதிரி கதாப்பாத்திரத்தில் நடிக்காதீங்க என்று ஒரு கபடி வீராங்கணை கூறினார்.

இன்னொரு பெண்ணோ எல்லா படத்திலேயும் பாவாடை தாவணி, சுடிதார்னு ஒரே மாதிரியான ஆடையில் வருகிறீர்கள்.

கொஞ்சம் கவர்ச்சியாகவும், புது மாதிரியாகவும் ஆடை அணியலாமே என்றார். இதற்கு பதிலளித்த அஞ்சலி, கதைப்படி எனக்கு என்ன கதாப்பாத்திரமோ, அது மாதிரி தான் என்னோட ஆடையும் இருக்கும். இதையெல்லாம் நான் முடிவு பண்ணுவதில்லை. என் இயக்குனர் தான் முடிவு பண்ணுவார் என்று பதிலளித்தார்.

பாடசாலை மாணவியின் சடலம் மீட்பு



யாழ். இணுவில் பகுதியிலுள்ள வீடு ஒன்றில் இருந்து பாடசாலை மாணவி ஒருவரின் சடலம் இன்று (11) புதன்கிழமை அதிகாலை மீட்கப்பட்டுள்ளதாக சுன்னாகம் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

யாழ். இணுவிலில் பிரபல பாடசாலை ஒன்றில் கல்வி பயிலும் இந்த மாணவி பேத்தியாருடன் தனிமையில் வாழ்ந்து வந்துள்ளதாகவும் அவரின் உடலில் வெட்டுக் காயங்கள் காணப்படுவதாகவும் சுன்னாகம் பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.

தர்மலிங்கம் தமயந்தி (வயது 16) என்ற பாடசாலை மாணவியே சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.

இவரது சடலம் மருத்துவப் பரிசோதனைக்காக யாழ்.போதனா வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளது.

சந்தேகத்திற்கிடமாக இந்த மரணம் தொடர்பில் சுன்னாகம் பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு ஆரம்பித்துள்ளனர்.

செவிப்பறை கிழித்த மாணவர்களுக்கு வகுப்புத் தடை




யாழ். பல்கலைக்கழக கனிஸ்ட மாணவனை பகிடிவதைக்கு உள்ளாக்கிய சிரேஸ்ட மாணவர்கள் மூவருக்கு யாழ். பல்கலைக்கழக நிர்வாகம் வகுப்புத்தடை விதித்து இடைநிறுத்தியுள்ளது. 

இதனை யாழ்.பல்கலைக்கழக நிர்வாகம் இன்று (11) புதன்கிழமை ஊடகங்களுக்கு அறிவித்துள்ளது. 

கடந்த மார்ச் 28 ஆம் திகதி யாழ்ப்ப்பாண பல்கலைக்கழக முதலாம் வருட கலைப்பீட மாணவனான தில்லைநாதன் தனராஜ் (வயது 22), சிரேஸ்ட மாணவர்களினால் பகிடிவதை செய்யப்பட்டு தாக்கப்பட்டு யாழ்.போதனா வைத்திய சாலையில் அனுமதிக்கப்பட்டார். 

இந்த மாணவன் தாக்கப்பட்ட சம்பவம் தொடர்பாக விசாரணைகளை மேற்கொண்ட யாழ். பல்கலைக்கழக நிர்வாகம், மாணவர்களை வகுப்புத்தடை விதித்து இடைநிறுத்தியுள்ளது. 

யாழ். பல்கலைக்கழகத்தில் பகிடிவதையில் ஈடுபடும் மாணவர்கள் மீது ஒழுக்காற்று நடவடிக்கை எடுக்கப்படும் என யாழ். பல்கலைக்கழக நிர்வாகம் எச்சரித்துள்ளது. 

சுரங்க விபத்து: ஊழியர்களை மீட்கும் பணி தீவிரம்



பெரு நாட்டில் உள்ள கெப்சா நெக்ரா என்ற இடத்தில் கடந்த சில திகதிகளுக்கு முன்பு, செம்பு சுரங்கம் ஒன்று திடீரென இடிந்து விழுந்ததில் 9 தொழிலாளர்கள் சுரங்கத்திற்குள் சிக்கிக் கொண்டனர்.
இதையடுத்து சுரங்கத்தற்கு செல்லும் பாதை முழுவதும் மண்களால் மூடப்பட்டதால் ஊழியர்களை உடனடியாக மீட்க முடியவில்லை.
சுரங்கத்தில் சிக்கிய 9 பேரும் 7 திகதிகளாக இன்று வரை சுரங்கத்திற்குள்ளேயே இருக்கிறார்கள்.
அவர்களை மீட்பதற்கு இதுவரை எடுத்த முயற்சிகள் அனைத்தும் தோல்வியில் முடிகின்றன. இருப்பினும் குழாய் மூலம் ஓக்சிஜன் வாயு செலுத்தப்படுகிறது. மேலும் உணவு, தண்ணீர் போன்றவையும் குழாய் மூலம் செலுத்தி வருகிறார்கள்.
தகவல் தொடர்பு சாதனம் செயற்படுகின்றன. அதன் மூலம் 9 பேரும் நலமாக இருப்பதாக தெரிவித்துள்ளனர்.
மேலும் அவர்களை மீட்பது குறித்த தொழில் நுட்ப ரீதியாக ஆலோசனையும் நடைபெற்று வருகிறது.

இதுபற்றி பெரு நாட்டு மந்திரி பெட்ரா, 9 பேரையும் நாங்கள் எப்படியாவது மீட்டு விடுவோம் என்று நம்பிக்கை தெரிவித்துள்ளார்.
கடந்த 2010ம் ஆண்டு பெரு நாட்டில் இதே போன்ற ஒரு சுரங்கத்தில் 33 தொழிலாளர்கள் சிக்கிக்கொண்டனர். அவர்கள் 69 நாட்களுக்கு பிறகு பத்திரமாக மீட்கப்பட்டது குறிப்பிடதக்கது.

படம் நடிக்க விரும்பும் ஐஸ்வர்யா ராய்



உலக அழகி ஐஸ்வர்யா ராய், தன் திருமணத்திற்கு பின்பு எந்திரன் படத்தில் நடித்தார் 
பின்னர் ஐஸ்வர்யா ராய்க்கு குழந்தை பிறந்ததால், திரைக்கு வருவது தாமதமாகி வந்தது.

தற்போது ஐஸ்வர்யா ராய் மீண்டும் தென்னிந்தியப் படங்களில் நடிக்கலாம் என்று முடிவு எடுத்துள்ளார்.இந்திப் படங்களில் நடிக்க ஒப்பந்தமானால் படம் வெளிவருவதற்கு இரண்டு வருடங்கள் ஆகும் என்பதால் தென்னிந்திய படங்களில் நடித்தால் உடனே படப்பிடிப்பு தொடங்கி, வேகமாக முடிந்து விடும் என்பதால் இந்த முடிவு எடுத்துள்ளார்.கதையில் நாயகிக்கு முக்கயத்துவம் இருக்கும் கதாபாத்திரமாக தேடிக் கொண்டிருக்கிறார்.


தென்னந்திய படங்களில் நல்ல கதையாக இருந்தால், அது ஒரு நல்ல திருப்புமுனையாக அமையும் என்று எண்ணி, தென்னிந்திய இயக்குனர்களிடம் கதை கேட்க ஆரம்பித்து இருக்கிறார் உலக அழகி ஐஸ்வர்யா ராய்.

ஆபாச இணையத்தள தேடல் உலகில் அதிகரிப்பு



உலகம் முழுவதும் பயன்படுத்தப்படும் இணையத்தள தேடலில் 3ல் ஒன்று ஆபாச இணையத்தள தேடல் என்ற அதிர்ச்சி தகவல் வெளியாகி உள்ளது.
எக்ஸ்ட்ரீம்டெக் என்ற இணையத்தளம் ஆய்வு நடத்தி வெளியிட்ட அறிக்கையில் கூறியதாவது, இணையத்தள பயன்பாட்டில் சுமார் 30 சதவீத தேடல்கள், ஆபாச இணையத்தளங்களை கொண்டுள்ளன.
உலகின் மிகப் பெரிய ஆபாச இணையத்தளத்தின் 400 கோடி பக்கங்கள் பார்க்கப்பட்டுள்ளன. மாதத்துக்கு 35 கோடி புதிய பார்வையாளர்கள் அதை காண்கின்றனர்.
ஆபாச இணையத்தளங்களில் அதிக பார்வையாளர்கள், பக்கங்கள் கொண்டவை அடிப்படையில் முதலிடம் பெறும், இணையத்தளத்தை ஒவ்வொருவரும் பார்க்க சராசரியாக 15 நிமிடம் செலவிட்டுள்ளனர்.
ஆபாச இணையத்தளத்தின் எவ்வளவு தகவல்கள் இடம் மாறின என்பது குறித்து அதன் சர்வரில் இருந்து பெறப்பட்ட தகவல்படி, விநாடிக்கு 50 ஜிகாபைட் அல்லது மாதத்துக்கு 29 பீட்டாபைட் அளவு ஆபாச படங்கள், தகவல்கள் இடம்மாற்றப்பட்டுள்ளன என்று தெரியவந்துள்ளது.

கழிவுநீரை குடிநீராக மாற்றி பெண் விஞ்ஞானி சாதனை



கழிவுநீரில் இருந்து குடிநீர் தயாரிக்கும் இயந்திரத்தை இங்கிலாந்தை சேர்ந்த பெண் விஞ்ஞானி உருவாக்கி வருகிறார்.
உலக பணக்காரர் பில்கேட்ஸ் அளித்த நிதியுதவியுடன் இந்த ஆராய்ச்சி நடந்து வருகிறது. மைக்ரோசாப்ட் நிறுவன அதிபரும், உலக பணக்காரர்களில் முன்னணியில் இருப்பவருமான பில்கேட்ஸ், குடிநீர் தட்டுப்பாட்டை போக்குவதற்கான கண்டுபிடிப்பை ஊக்குவிக்க நிதியுதவி அறிவித்தார்.
உலகம் முழுவதும் இருந்து 2 ஆயிரத்துக்கும் அதிகமானோர் தங்களது ப்ராஜக்ட்களை அனுப்பினர். அதில் இங்கிலாந்தை சேர்ந்த நானோ தொழில்நுட்ப வல்லுனர் சாரா ஹே என்ற பெண்ணின் ப்ராஜக்ட் தேர்ந்தெடுக்கப்பட்டது.
இங்கிலாந்தின் மான்செஸ்டர் பல்கலைக்கழகத்தின் கீழ் உள்ள ஸ்கூல் ஆப் மெட்டீரியல்ஸ் கல்வி நிலையத்தில் சாரா ஹே ஆராய்ச்சியாளராக பணியாற்றுகிறார்.
லண்டனின் இம்பீரியல் கல்லூரி மற்றும் டரம் பல்கலைக்கழக ஆராய்ச்சியாளர்களுடன் சேர்ந்து அவர் இந்த ஆராய்ச்சியில் ஈடுபட்டுள்ளார். ஆராய்ச்சிக்காக முதலில் அவருக்கு பில்கேட்ஸ் அண்ட் மெலிண்டா அறக்கட்டளை ரூ.50 லட்சம் நிதி அளித்துள்ளது.
இதுபற்றி சாரா கூறியதாவது: கழிவுநீரில் இருந்து மின்சாரம் தயாரிப்பது, எரிபொருள் தயாரிப்பது என பல்வேறு ஆராய்ச்சிகள் நடந்து வருகின்றன. இந்த ஆராய்ச்சியும் அதுபோன்ற முயற்சிதான்.
இயந்திரத்திற்குள் செலுத்தப்படும் கழிவுநீருடன் பாக்டீரியா கலவை மற்றும் நானோ துகள்கள் வினை புரியும். இந்த ரசாயன வினைக்கு பிறகு, ஹைட்ரஜன் வாயு உருவாகும்.
அதை ஹைட்ரசீனாக மாற்றுவது எளிது. அதுதான் ராக்கெட் எரிபொருளாக பயன்படுகிறது. கழிவுநீரில் இருந்து ஹைட்ரஜன் பிரிக்கப்பட்ட பிறகு, அந்த நீர் மேலும் மேலும் வடிகட்டப்பட்டு, சுத்திகரிக்கப்பட்டு குடிநீராக மாற்றப்படுகிறது.
உலகின் பல நாடுகளில், பல பகுதிகளில் குடிநீருக்கு மக்கள் திண்டாடுகின்றனர். சுத்தமான குடிநீர் தேடி பல கி.மீ. செல்கின்றனர். குடிநீருக்காக மக்கள் சிரமப்பட கூடாது என்பதே இந்த ஆராய்ச்சியின் நோக்கம்.
இயந்திரத்திற்கு இறுதி வடிவம் கொடுக்கும் பணி நடக்கிறது. அடுத்த ஆண்டில் பணி முடிந்து செயல் விளக்கம் அளிக்கப்படும். எங்கும் எளிதில் எடுத்து செல்லும் வகையில் இந்த மெஷின் இருக்கும் என்று கூறினார். அடுத்த ஆண்டில் இந்த ஆராய்ச்சிக்காக பில்கேட்ஸ் அறக்கட்டளை ரூ.5 கோடி நிதியை சாராவுக்கு வழங்க உள்ளது குறிப்பிடத்தக்கது.

கல்வி நிலையங்கள், இன்ரநெற் கபேக்கள் பெண்கள் மீதான துஸ்பிரயோகங்களுக்கு பங்களிப்பு! சுகாதார பணிப்பாளர்



யாழ்.மாவட்டத்திலுள்ள தனியார் கல்வி நிலையங்களும் இன்ரநெற் கபேக்களுமே அதிகளவில் பாலியல் ரீதியான துஸ்பிரயோகத்திற்கு வழி வகுப்பதாக யாழ்.பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் ஆர்.கேதீஸ்வரன் தெரிவித்துள்ளார். 

தனியார் கல்வி நிலையங்கள். மாலையில் 6 மணிக்கு பின்னர் வகுப்புக்கள் நடாத்துவதற்கு ஒருபோதும் அனுமதிக்கக் கூடாது.தனியார் வகுப்பு நிலையங்களில் மலசல கூடம், குடிநீர் மற்றும் போதிய இடவசதி உள்ளிட்ட அடிப்படை வசதிகளை ஏற்படுத்தப்படவேண்டும்.

விடுமுறைக் காலங்களில் தனியார் வகுப்புகள் தொடர்ச்சியாக நடாத்தப்படுவதும் மாணவர்களுக்கு உளத்தாக்கங்கள் ஏற்படுகின்றன.குறிப்பாக பாடசாலைக் கல்வி முடிந்ததும் மாணவர்கள் செய்வதறியாமல் உள்ளனர். இவர்களை கல்வி திணைக்களம் வழிப்படுத்த வேண்டும்

யாழ்ப்பாணத்தில் 21 வயதிற்கும் குறைந்தவர்கள் மதுபாவனையில் ஈடுபடுகின்றனர்.பொது இடங்களில் மதுபானங்களை குடிகாரர்கள் அருந்துகின்றனர். இவற்றை பொலிஸார் தடுக்க வேண்டும்.யாழ்ப்பாணத்திலுள்ள ஒரு சில இன்ரநெற் கபேக்களில் பாடசாலை நேரத்தில் பாடசாலைச் சீருடையில் சென்று மாணவர்கள் இணையப்பாவனையில் ஈடுபடுகின்றனர்.

இவைதவிர மூடிய பகுதியில் கணணி மொனிற்றரை நெற்கபேக்களில் பாவிப்பதை தடை செய்ய வேண்டும். இவைகளே அதிகளவான சீரழிவுகளை ஏற்படுத்துகின்றன.இவ்வாறு கண்டறியப்பட்ட காரணங்களை இனங்கண்டு அவற்றை தடுப்பதற்குரிய நடவடிக்கைகளை மேற்கொண்டால் துஸ்பிரயோகங்களை இல்லாதொழிக்கலாம் என்றார்.
 ஊர்காவற்றுறை உதவி அரச அதிபர் 
ஊர்காவற்றுறை பிரதேச செயலப்பிரிவில் பெண்கள் மற்றும் சிறுவர்களுக்கு எதிரான வன்முறைகளைக் கட்டுப்படுத்துவதற்கு போதிய உத்தியோகஸ்தர்கள்  இல்லாமையே காரணமாகும் என ஊர்காவற்றுறை உதவி அரசாங்க அதிபர் தெரிவித்துள்ளார்.
ஊர்காவற்றை உதவி அரசாங்க அதிபர் பிரிவில் பெண்கள் அபிவிருத்தி உத்தியோகத்தர் சிறுவர் உரிமை மேம்பாட்டு உத்தியோகஸ்தர் முன்பள்ள பருவ உத்தியோகஸ்தர் ஆகியோர் இன்னமும் நியமிக்கப்படவில்லை.
இவ்வாறு ஆளணி வளம் இன்மையால் பெண்கள் மற்றும் சிறுவர்களுக்கு எதிரான வன்முறைகளை கட்டப்படுத்த முடியாதுள்ளது. குறிப்பாக மக்களுக்கு விழிப்புணர்வுகளை ஏற்படுத்த முடியாதுள்ளது.
எனவே மிக விரைவாக இவ்வெற்றிடங்களை நிரப்புவதன் மூலமே இவற்றை தடுக்க நடடிவடிக்கைகள் மேற்கொள்ள முடியும் என்றார்.
இதேவேளை ஊர்காவற்றுறை உதவி அரசாங்க அதிபர் பிரிவில் அண்மைக்காலமாக தொடர்ச்சியாக பெண்கள் மற்றும் சிறுவர்களுக்கு எதிரான வன்முறைச் சம்பவங்கள் அதிகரித்த வண்ணம் உள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது
பாலியல் துஸ்;பிரயோகங்களில் ஈடுபடும் அரச உயர் அதிகாரிகள் கடுமையாக தண்டிக்கப்படவேண்டும்
உயர் பதவிகளிலுள்ள அரச உத்தியோகளின் பாலியல் துஸ்;பிரயோகங்களை ஒருபோதும் ஏற்றுக்கொள்ள முடியாதென்றும் இவ்வாறு நடந்து கொள்ளுகின்றவர்கள் கடுமையாகத் தண்டிக்கப்பட வேண்டும் என்றும் நல்லூர் பிரதேச செயலர் பா.செந்தில் நந்தனன் தெரிவித்துள்ளார்.
யாழ்.மாவட்டத்தில் இடம்பெறும் பாலியல் ரீதியான துஸ்;பிரயோகங்களை கட்டுப்படுத்துவதற்கு இன்றைய தினம் இடம்பெற்ற விசேட கூட்டத்திலேயே அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.
யாழ்.மாவட்டத்தில் உயர்; அரச உத்தியோகத்தில் உள்ளவர்களும் கல்வியலாளர்களும் பெண்கள் மற்றும் சிறுவர்களுக்கு எதிரான துஸ்;பிரயோகங்களில் ஈடுபடுகின்றனர்.
இவர்கள் தவறுகளைச் செய்கின்றபோதும் இவர்கள் தண்டிப்படாமல் உள்ளனர். இவர்ளுக்கு கடுமையான தண்டனைகள் வழங்கப்படவேண்டும். இவளுக்கு எதிரான குற்றங்களை மூடி மறைப்பது ஏற்றுக்கொள்ள முடியாது.
யாழ்பாணம் சர்வதேச ரீதியாக பிரபல்ஜமடைந்த ஒரு இடம். இங்கு இவ்வாறான குற்றங்களுக்கு வழங்கப்படும் தண்டனைகள் ஏனையவர்களுக்கு ஒரு பாடமாக அமைய வேண்டும். இவ்வாறான குற்றவாளிகளுக்கு பாரபட்சமின்றி தண்டனை வழங்ப்படவேண்டும் என்றார்.

28 நாடுகளுக்கு சுனாமி எச்சரிக்கை



இந்தோனேஷியாவில் இன்று கடும் நிலநடுக்கம் ஏற்பட்டது. இது ரிக்டர் அளவுகோளில் 8.9 ஆக பதிவானது.
இந்தோனேஷியாவின் அச்சே மாநிலத்தின் தலைநகரான பண்டா அச்சேவில் இருந்து 495 கிலோ மீட்டர் தொலைவில், கடலுக்குள் 33 கிலோ மீட்டரில் நிலநடுக்கம் மையம் கொண்டதாக அமெரிக்க புவியியல் ஆய்வு மையம் மதிப்பிட்டிருந்தது. இதனையடுத்து 28 நாடுகளுக்கு சுனாமி எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
சுனாமி எச்சரிக்கைகள் விடப்பட்ட நாடுகள்: இந்தியா, இலங்கை, அவுஸ்திரேலியா, மியான்மர், தாய்லாந்து, மாலைதீவுகள், சிங்கப்பூர், மலேசியா, ஓமன், ஈரான், பாகிஸ்தான், வங்கதேசம், கென்யா, தென்னாப்பிரிக்கா என மொத்தம் 28 நாடுகளுக்கு சுனாமி எச்சரிக்கைகள் விடப்பட்டுள்ளன.
கட்டிடங்கள் குலுங்கியதால் மக்கள் ஓட்டம்: நிலநடுக்கம் ஏற்பட்ட சில நிமிடங்களில் கட்டிடங்கள் அனைத்தும் நடுக்கம் கண்டது. இதையடுத்து மக்கள் ஓட்டம் பிடித்து வீதியில் வந்து குவிந்ததாக ஊடகங்கள் தகவல் வெளியிட்டுள்ளன.
இந்த நிலநடுக்கம் காரணமாக உயிர் சேதம், பொருட்சேதங்கள் குறித்த தகவல்கள் இன்னும் வெளிவரவில்லை.

சங்ககாராவினால் முனாஃப் படேலுக்கு அபராதம்



நடுவரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்ட மும்பை வீரர் முனாஃப் படேலுக்கு போட்டி ஊதியத்தில் 25 சதவீதம் அபராதம் விதிக்கப்பட்டது.
டெக்கான் சார்ஜர்ஸ்- மும்பை இண்டியன்ஸ் அணிகள் மோதிய ஐபிஎல் லீக் ஆட்டம் விசாகப்பட்டினத்தில் திங்கள்கிழமை நடைபெற்றது.
இந்த ஆட்டத்தில் முனாஃப் படேலின் ஓவரில் டெக்கான் அணித்தலைவர் சங்ககாரா போல்டானார். ஸ்டெம்பை லேசாக உரசிச் சென்ற பந்து விக்கெட் கீப்பர் தினேஷ் கார்த்திக்கின் பேடில் பட்டு மீண்டும் ஸ்டெம்பை தகர்த்தது.
அதை சரியாகக் கவனிக்காத நடுவர்கள், பேடில் பட்டு தான் பந்து ஸ்டெம்பை தகர்த்தது என்று கூறி அவுட் கொடுக்க மறுத்தனர். இதனால் ஹர்பஜனும், முனாஃபும் நடுவர்களுடன் கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.
இறுதியில் மூன்றாவது நடுவரிடம் முறையிடவே தீர்ப்பு மும்பைக்கு சாதகமானது. இருப்பினும் நடுவரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டதற்காக முனாஃபுக்கு 25 சதவீதம் அபராதம் விதிக்கப்பட்டது. அதே நேரத்தில் அணித்தலைவர் ஹர்பஜன் சிங் எச்சரிக்கப்பட்டார்
அதே போன்று இந்த ஆட்டத்தின்போது மும்பை வீரர் சுமன் ஆட்டமிழந்த போது, டெக்கான் வேகப்பந்து வீச்சாளர் டேல் ஸ்டெயின், மும்பை வீரர்களின் ஓய்வறையை நோக்கி சைகை காண்பித்து கிண்டல் செய்தார். இதையடுத்து அவரும் எச்சரிக்கப்பட்டார்.

ரயில் மின்சார விநியோகம் துண்டிக்கப்பட்டுள்ளது


இலங்கையின் கரையோரப்பகுதிகளில் மின்சார விநியோகம் துண்டிக்கப்பட்டுள்ளதாக இலங்கை மின்சார சபை தெரிவித்துள்ள அதேவேளை, கரையோரப்பகுதிகளுக்கான ரயில் சேவையும் இரத்துச்செய்யப்பட்டுள்ளதாக ரயில்வே கட்டுப்பாட்டுத் திணைக்களம் கூறியுள்ளது. 

இதேவேளை, பாதுகாப்புக் காரணங்களை முன்னிட்டு கரையோர பகுதிகளுக்கான தனியார் பஸ் சேவைகளும் 3 மணித்தியாலத்திற்கு இடைநிறுத்தப்பட்டுள்ளதாக தனியார் பஸ் உரிமையாளர்கள் சங்கத்தின் தலைவர் கெமுனு விஜயரட்ன தெரிவித்துள்ளார். 

யாழ்ப்பாணத்திலும் சுனாமி எச்சரிக்கை



இந்தோனேஷியாவில் ஏற்பட்ட புவி அதிர்வு அடுத்து சுனாமி எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

பிரதேச மக்களை தெளிவுபடுத்துவதற்கு தேவையான அனைத்து நடவடிக்கைகைகளும் எடுக்கப்பட்டுள்ளதாக திருகோணமலை மாவட்ட செயலாளர் மேஜர் ஜெனரல் ரீ.ரீ.ஆர்.டி சில்வா தெரிவிக்கிறார்.

சுனாமி ஏற்படக்கூடிய சாத்தியம் உள்ளது குறி்த்து உத்தியோகப்பூர்வ அறிவித்தல் விடுக்கப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிடுகிறார்.

இது தவிர ஏற்கனவே முன்னெடுக்கப்பட்ட ஒத்திகைகளின் போது நடைமுறைப்படுத்தப்பட்ட விடயங்களை கடைபிடிக்குமாறு மக்களிடம் கேட்கப்பட்டுள்ளது.

புவி அதிர்வினால் கட்டடங்கள் சில அதிர்வுக்குள்ளானதுடன் அதிர்வு ஏற்பட்டு அன்னளவாக இரண்டு மணித்தியாலங்களுக்குள் கடல் சீற்றம் ஏற்படாத பட்சத்தில் திருகோணமலைக்கு எவ்வித பாதிப்பும் இல்லையென தெரிவிக்கப்படுகிறது.

இதேவேளை யாழ்ப்பாணத்திலும் சுனாமி எச்சிரி்க்கை விடுக்கப்பட்டுள்ள நிலையில்  நயினாதீவு உள்ளிட்ட தீவுகளை அண்மித்த கடல் மார்க்க பயணங்களை தவிர்க்குமாறு யாழ். மேலதிக அரசாங்க அதிபர் கூறினார்.

நாட்டின் தென் மற்றும் கிழக்கு மாகாணங்களின் கரையோரப் பகுதிகளில் இன்று மாலை வேளையில் மின்சாரத்தை துண்டிப்பதற்கான. நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளதாக இலங்கை மின்சார சபை தெரிவிக்கிறது.