//]]>3

ஞாயிறு, 20 மே, 2012

பொலிஸ் வலைவீச்சுத் தேடுதல்: 59 பேர் கைது


மாத்தறை மாவட்டத்தின் சில பகுதிகளில் நேற்று 19ம் திகதி மாலை 4 மணி தொடக்கம் நள்ளிரவு 12 மணிவரையான 8 மணிநேரத்தில் பொலிஸார் மேற்கொண்ட வலைவீச்சுத் தேடுதலில் 59 பேர் சிக்கியுள்ளனர். 

இவ்வாறு சிக்கியவர்களில் இராணுவ விட்டோடிகள் 20 பேர், பிடிவிறாந்து பிறப்பிக்கப்பட்ட 21 பேர், சந்தேகநபர்கள் 8 பேர் தேடப்பட்ட சந்தேகநபர் ஒருவர், வேறு குற்றச் செயல்களுடன் தொடர்புடைய 8 பேர் மற்றும் துப்பாக்கியை தன்வசம் வைத்திருந்த ஒருவர் உள்ளடங்குகின்றனர். 

இத்தேடுதல் நடவடிக்கை மாத்தறை மாவட்டத்தின் 14 பொலிஸ் பிரிவுகளில் மேற்கொள்ளப்பட்டுள்ளது. 

கை செய்யப்பட்டவர்களிடம் பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர். 

வெற்றிகொள்ள ஒரே ஆயுதம் கல்வியே..!



தென்கிழக்குப் பல்கலைக்கழகத்தின் ஏழாவது பட்டமளிப்பு விழா நேற்று சனிக்கிழமை ஒலுவில் வளாக பல்கலைக்கழக பூங்காவில் நடைபெற்றது. வேந்தர் பேராசிரியர் ஏ.எம்.இஸ்ஹாக் தலைமையில், பல்கலைக்கழக உபவேந்தர் கலாநிதி எஸ்.எம்.எம்.இஸ்மாயில் முன்னிலையில் நடைபெற்ற இப்பட்டமளிப்பு விழாவில் உயர் கல்வி அமைச்சர் எஸ்.பி.திஸாநாயக்க பிரதம அதிதியாகக் கலந்து கொண்டார். 

இப்பட்டமளிப்பு விழாவில் விஞ்ஞானம், கலை, வர்த்தகம் மற்றும் வணிக முகாமைத்துவ பீடங்களைச் சேர்ந்த 454 உள்வாரி மாணவர்களுக்கு பட்டங்கள் வழங்கப்பட்டன. அத்துடன் இதன்போது தென்கிழக்குப் பல்கலைக்கழக ஸ்தாபக உபவேந்தர் பேராசிரியர் எம்.எல்.ஏ.காதர் இலக்கிய கலாநிதி பட்டம் வழங்கி கௌரவிக்கப்பட்டார். 

இந்நிகழ்வில் உயர்கல்வி அமைச்சின் செயலாளர் கலாநிதி சுனில் ஜெயந்த நவரட்ன பட்டமளிப்பு பேருரையை நிகழ்த்தினார். இரண்டாம் நாள் பட்டமளிப்பு வைபவம் இன்று (20) ஞாயிற்றுக்கிழமை மாலை இடம்பெறவுள்ளது. 

யாழில் கிணற்றிலிருந்து ஆயுதங்கள் மீட்பு!


பாழடைந்த கிணறொன்றிலிருந்து ஒரு தொகுதி ஆயுதங்ள் கைப்பற்றப்பட்டுள்ளதாகப் பொலிஸ் ஊடகப் பேச்சாளர் அலுவலகம் தெரிவித்துள்ளது.
யாழ்ப்பாணம் கோப்பாய்ப் பிரதேசத்தின் வசந்தபுரம் பகுதியிலேயே மேற்படி ஆயுதங்கள் மீட்கப்பட்டுள்ளது. இதன்படி மில்லி மீற்றர் 81 ரக மோட்டார் ரவைகள் 18 மற்றும் கைக்குண்டொன்றும் கைப்பற்றப்பட்டுள்ளன.
இந்த சம்பவம் குறித்த மேலதிக விசாரணைகளை கோப்பாய் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

இத்தாலியில் பூமியதிர்வு; நால்வர் பலி


இத்தாலியின் வடபகுதியில் இன்று ஞாயிற்றுக்கிழமை அதிகாலை வேளையில் ஏற்பட்ட பூமியதிர்ச்சி காரணமாக நால்வர் உயிரிழந்துள்ளனர். ஆயிரக்கணக்கானோர் தமது வீடுகளை விட்டு வெளியேறியுள்ளதாகவும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். 

வடமேற்கு பொலோக்னவில் 6.0 ரிச்டர் அளவில் இந்த பூமியதிர்ச்சி ஏற்பட்டதாக அமெரிக்க புவியியல் திணைக்களம் தெரிவித்துள்ளது. 

இந்த பூமியதிர்ச்சி காரணமாக மூவர் உயிரிழந்துள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இந்த பூமியதிர்ச்சி காரணமாக ஏற்பட்ட சேதவிபரங்களை  மதிப்பீடு செய்துவருவதாக அதிகாரிகள் கூறியுள்ளனர். 

வெறுமனே தெரிவுக் குழுவுக்குள் செல்லாதீர்கள்! யாழ். பல்கலை.மாணவன் தர்சானந்



போர் முடிவடைந்தவுடன் சகல பிரச்சினைகளும் தீர்க்கப்பட்டு விட்டன. இனப்பிரச்சினை என தீர்க்கப்படுவதற்கு இனி எதுவும் கிடையாது என அரசாங்கம் கூறிவந்தது.

எனினும் பல்வேறு பட்டவகையில் வெளியுலகில் இருந்து அரசாங்கத்திற்குக் கிடைத்த அழுத்தங்களை சமாளிக்கும் நோக்குடன் பிரச்சினைகளுக்கு இறுதித் தீர்வளிப்பதாகக்கூறி நாடாளுமன்றத் தெரிவுக் குழுவென ஒரு குழுவை தற்போது முன்னிறுத்தியுள்ளார்கள்.

இதில் நாடாளுமன்றத்தில் அங்கம் வகிக்கும் அனைத்து கட்சிகளுக்கும் அழைப்பு விடுக்கப்பட்டுள்ள நிலையில் வடகிழக்கில் தமிழ் மக்களின் ஏகோபித்த ஆணையைப் பெற்ற கட்சியான தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினையும் உள்வாங்குவதற்கான முயற்சிகள் நடைபெற்று வந்தன. தற்போது அது வெற்றி பெற்றுள்ளது போலவே தோன்றுகின்றது.

கூட்டமைப்பினர் தெரிவுக் குழுவிற்குள் செல்வது சர்வதேச மட்டத்தில் தமிழ் மக்கள் சார்பாக நாம் சகல விட்டுக்கொடுப்புகளையும் செய்துவிட்டோம் எனக் காட்டுவதாகவும் அதன் மூலம் ஓர் தீர்வைப் பெற்றுத் தருவதற்கான சந்தர்ப்பங்களாகவும் அமையும் என எதிர்பார்த்தாலும் தெரிவுக் குழுவிற்குள் வெறுமனே பிரவேசிப்பது புத்திசாலித்தனமானதல்ல.

இத் தெரிவுக் குழுவுடன் எமக்கு என்று இறுதித் தீர்வு கிட்டவேண்டும் என்ற நிபந்தனையை கூட்டமைப்பு முன்வைப்பது அவசியமானது. உலகை ஏமாற்ற இக்குழு பயன்படக்கூடாது.

தெரிவுக் குழுவிற்குள் தமிழ் மக்கள் தமது அபிலாஷைகளைப் பூர்த்தி செய்யக் கூடிய உறுதியான தீர்வை அங்கு கூட்டமைப்பினால் முன்வைக்கப்பட்டு நிறைவேற்ற முடியுமா என்ற உறுதிமொழியை அரசாங்கம் எதோ ஒருவகையில் வழங்க வேண்டும்.

தெரிவுக் குழு சம்பந்தப்பட்ட விடயங்கள் அனைத்தும் ஏற்றுக் கொள்ளத்தக்க வகையில் மக்களுக்குப் பகிரங்கப்படுத்தப்பட வேண்டும்.

இல்லையேல் கூட்டமைப்பிற்கும் அரசாங்கத்திற்கும் இடையில் இடம்பெறும் மூடுமந்திரமான பேச்சுகளாகவும் காலத்தினை வெறுமனே இழுத்தடிப்பதற்கும் அரசாங்கம் சமகாலத்தில் எதிர்கொண்டுள்ள அழுத்தங்களைத் தீர்ப்பதற்குமான உத்தியாகவே இப் பேச்சுகள் நோக்கப்படும்.

அரசாங்கத்தினால், நாடாளுமன்றத் தெரிவுக் குழுவிற்குள் அங்கம் வகிக்கக் கூடிய உச்ச இனவாதத்தினைக் கொண்டுள்ள கட்சிகள் குழுவில் முடிவுகளுக்குத் தடையாக அமைகின்றன எனக்கூறி தமிழ் மக்களின் நியாயபூர்வமான பிரச்சினைகள் தொடர்ச்சியாக புறந்தள்ளப்பட்டு ஏமாற்றவும் படலாம்.

அவ்வாறாக ஏமாற்றப்படும் சூழலில் அது கால ஓட்டத்தினைக் கொண்டதாகவும் இக்காலத்தில் சர்வதேச அளவில் புவி நலன்சார் அரசியலை மையப்படுத்திய எம் மீதான கரிசனைசார் கண்ணோட்டங்கள் அனுதாபங்கள் குறைவடைந்தும் விடத்தக்க ஆபத்துகள் உள்ளன.

இந்நிலையில் தெரிவுக்குழு தொடர்பான சரியாக சூழ்நிலைகள் கூட்டமைப்பினால் ஊகிக்கப்பட வேண்டும். தமிழ் மக்கள் வரலாற்று ரீதியாக இனப்பிரச்சினைத் தீர்வில் ஏமாற்றப்பட்டவர்கள் என்ற வகையில் பலம்வாய்ந்த சர்வதேச மூன்றாம் தரப்பு மத்தியஸ்தம் என்பதும் அவசியம். 

செல்போன் பயன்பாடு குறித்து திடுக்கிடும் தகவல்கள்!



வீட்டை விட்டு வெளியே கிளம்பினாலே செல்போன் இருக்கா என்றுதான் கை தொட்டுப் பார்க்கிறது. அந்த அளவிற்கு செல்போன் நம்மில் அத்தியாவசியப் பொருளாகிவிட்டது.
செல்போன் பயன்பாடு குறித்து இங்கிலாந்தின் ’செக்யூர் என்வாய்’ அமைப்பு ஒரு ஆய்வு மேற்கொண்டது. அந்த ஆய்வில் பல சுவாரஸ்யமான தகவல்கள் தெரியவந்தன அவை உங்களுக்காக :
58 சதவீதம் பேர் அலுவலகத்திற்கு தனியாகவும், சொந்த பயனுக்கு தனியாகவும் ஒரு செல்போன் வைத்து கொள்கின்றனர். 41 சதவிகிதம் பேர் ஒன்றுக்கும் மேற்பட்ட செல்போன்களை பயன்படுத்தி வருகின்றனர். செல்போன் பத்திரமாக இருக்கிறதா என்ற சந்தேகம் ஒருவருக்கு தினமும் 34 முறை வருவதும் ஆய்வில் தெரியவந்தது.
நோமொபோபியா (கையில் செல்போன் இல்லையோ என்ற பயம்), செல்போன் தொலைந்து விடுமோ, யாராவது அதில் உள்ள தகவல்கள், படங்களை பார்த்து விடுவார்களோ என்ற கவலையும் 66 சதவீதம் பேருக்கு எந்நேரமும் உள்ளது. இந்த பயத்துக்கு 18 முதல் 24 வயதுடைய இளைஞர்கள் 77 சதவீதம் பேரும், 25 முதல் 34 வயதுடையோர் 68 சதவீதம் பேரும் ஆளாகியுள்ளனர்.
செல்போன் இல்லாமல் ஒரு வினாடி கூட இருக்க முடியாது. செல்போன் இல்லாத வாழ்க்கையை நினைத்துக்கூட பார்க்க முடியாது என்று 66 சதவீதம் பேர் கருத்து தெரிவித்தனர்.
மேலும், 75 சதவீதம் பேர் பாத்ரூமிலும் செல்போன் பயன்படுத்துகின்றனர். 49 சதவீதம் பேர் தங்கள் வாழ்க்கைத்துணை கூட தனது செல்போனை பார்க்கக் கூடாது என நினைக்கின்றனர்.
நான்கு வருடங்களுக்கு முன்பு இதே நிறுவனம் நடத்திய ஆய்வில் நோமொஃபோபியா விற்கு 53 சதவிகிதம் பேர் பாதிக்கப்பட்டிருந்தனர். ஆனால் தற்போது 66 சதவிகிதம் பாதிக்கப்பட்டுள்ளது தெரியவந்துள்ளது.
இந்த ஆய்வு இங்கிலாந்தில்தான் நடைபெற்றுள்ளது. நம் ஊரில் அரிசி வாங்கி சமைத்து சாப்பிட்டாலும் செல்போனுக்கு டாப் அப் செய்ய மறப்பதில்லை. இதுபற்றி யாராவது ஆய்வு செய்வார்களா?

அழகில் தானே முதல் என கூறிய நடிகை -ஸ்ரேயா



தமிழ், தெலுங்கில் முன்னணி நடிகையாக இருந்த ஸ்ரேயாவுக்கு பட வாய்ப்புகள் குறைந்துள்ளன. இளம் நாயகிகள் வரத்து அவரது மார்க்கெட்டை சரித்து உள்ளது. இது குறித்து ஸ்ரேயாவிடம் கேட்ட போது அவர் கூறியதாவது:-
நடிகைகளுக்கு அதிர்ஷ்டம் முக்கியம். எனக்கு ஒரு சமயம் அதிர்ஷ்டம் இருந்தது நிறைய படங்களில் நடித்தேன். பெரிய ஹீரோக்களுடன் ஜோடி சேர்ந்தேன். இப்போது எனக்கு நேரம் சாதகமாக இல்லை. ஆனால் மீண்டும் அதிர்ஷ்டம் வரும் என்ற நம்பிக்கை உள்ளது. அழகில் என்னை யாரும் மிஞ்ச முடியாது.
சமீபத்தில் சேலை போன்ற பாரம்பரிய உடைகள் அணிந்து போட்டோ எடுத்துக் கொண்டேன். அந்த படங்களை பார்த்த போது நான் இத்தனை அழகா என்று ஆச்சரியப்பட்டேன். அவ்வளவு அழகாக இருந்தேன். நிறைய பேர் அந்த படங்களை பார்த்து விட்டு இத்தனை நாள் இந்த அழகை எங்கே ஒளித்து வைத்து இருந்தாய் என்று வியந்தார்கள்.
தெலுங்கு படத்தில் அறிமுகமான போது எப்படி இருந்தேனோ அப்படித்தான் இப்போதும் இருக்கிறேன். மும்பையில் ஒரு பேஷன் ஷோவில் சமீபத்தில் பங்கேற்றேன். மேடையில் நான் நடந்து வந்த போது கிடைத்த கைதட்டல்கள் மறக்க முடியாதவை. இவ்வாறு ஸ்ரேயா கூறினார்.

பெட் ரூமில் இடம் கொடுக்காத ஜஸ்வர்யா


காலை முதல் 24 மணி நேரமும் குழந்தையை கவனிப்பதால் பெட் ரூமில் என்னை ஐஸ்வர்யாராய் அனுமதிப்பதில்லை என்று அபிஷேக் பச்சன் கூறியுள்ளார்.
“குழந்தை ஆரத்யாவுடன் எப்போதும் பொழுதை கழிப்பேன். அவளுடன் விளையாடுவேன். உச்சா போய் டயபரை நனைத்துவிட்டால் அதை மாற்றுவேன். ஆனால், அதற்கு ஐஸ்வர்யா என்னை அனுமதிப்பதில்லை.
நன்றாக தூங்கி கொண்டிருக்கும் நள்ளிரவு நேரத்தில் திடீரென்று ஆரத்யா விழித்து கொண்டு அழ ஆரம்பித்து விடுவாள். உடனே எனக்கும் தூக்கம் கலைந்துவிடும். குழந்தையை கொஞ்ச ஆரம்பித்து விடுவேன். மறுபடியும் தூங்க செல்ல மாட்டேன். இதனால் மறு நாள் ஷூட்டிங் போவதற்கு தாமதமாகிவிடும். இதை ஐஸ்வர்யா விரும்பவில்லை.
மறுநாள் ஷூட்டிங் இருந்தால், என்னை குழந்தையுடன் தூங்க அனுமதிக்கமாட்டார். பெட்ரூமுக்கு வராதீர்கள், வேறு அறையில் தூங்குங்கள் என்று என்னை அனுப்பிவிடுவார்.
ஆரத்யாவுக்கு மே 16 ஆம் திகதி 6 மாதம் நிறைவடைகிறது. இன்னும் கொஞ்சம் வளரும் வரை எனக்கு பெட்ரூமில் தூங்க அனுமதி கிடைக்காது என்று நினைக்கிறேன்.
ஐஸ்வர்யாவை பொறுத்த வரை அவரது காலைப்பொழுது குழந்தையுடன் தொடங்கி இரவுப் பொழுதும் குழந்தையுடனே முடிகிறது. மசாஜ் கொடுப்பது, குளிப்பாட்டுவதில் தொடங்கி நாள் முழுவதும் குழந்தையை கண்ணும் கருத்துமாக பார்த்து கொள்கிறார்.
இப்போதெல்லாம் ஐஸ்வர்யாவின் கவனிப்புக்காக நான் கியூவில் காத்திருக்க வேண்டி உள்ளது.”
இவ்வாறு அபிஷேக் பச்சன் கூறினார்.