//]]>3

திங்கள், 16 ஏப்ரல், 2012

பேஸ்புக்: மூலம் 384 கைதிகள் தப்பிச் செல்ல



பாகிஸ்தானில் உள்ள சிறைச்சாலையில் தீவிரவாதிகள் உட்பட 384 கைதிகள் தப்பிச் சென்றனர். இதற்கு பேஸ்புக் தான் காரணம் என்ற அதிர்ச்சித் தகவல் தற்போது தெரியவந்துள்ளது.

பாகிஸ்தானின் பஸ்தூன் மலைப்பகுதியிலுள்ள பான்னூ என்ற இடத்தில் சிறைச்சாலையில் தீவிரவாதிகள் உட்பட பல்வேறு கைதிகள் சிறை வைக்கப்பட்டிருந்தனர்.

இந்நிலையில் நேற்று காலை தலிபான் தீவிரவாதிகள் அங்கு திடீரென தாக்குதல் நடத்தினார்கள். அப்போது ராக்கெட் குண்டுகளும், கையெறி குண்டுகளும் வீசப்பட்டதால் சிறைச்சாலை தகர்ந்தது.

பின்னர் அங்கு சிறை வைக்கப்பட்டிருந்த தங்கள் கூட்டாளிகளை தலிபான்கள் விடுவித்தனர். அப்போது இந்த சந்தர்ப்பத்தை பயன்படுத்தி மேலும் 384 கைதிகள் தப்பி ஓடி விட்டனர்.

கடந்த 2003ம் ஆண்டு பாகிஸ்தானின் முன்னாள் இராணுவ தளபதி முஷாரப்பை கொல்ல முயன்ற குற்றத்திற்காக மரண தண்டனை விதிக்கப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டிருந்த அட்னன் ரஷித் என்ற கைதியும் நேற்று தப்பிச் சென்றுள்ளான்.

ரஷித்தை விடுவிப்பதற்காக பாகிஸ்தானின் தலிபான் தீவிரவாதிகள் தான் இந்த தாக்குதலில் ஈடுபட்டுள்ளதாக பாதுகாப்பு அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

மரண தண்டனைக் கைதிகள் 21 பேர் உட்பட மொத்தம் 384 கைதிகள் தப்ப வைக்கப்பட்டுள்ளனர். சிறைக்குள் இருந்தாலும் ரஷித் கைபேசி உபயோகித்து வந்ததாகவும், பேஸ்புக் மற்றும் பல சமூக வலைத்தளங்களில் ரஷித்தின் பங்களிப்பு இருந்து வந்ததாகவும் தகவல்கள் வெளிவந்துள்ளன.

இவற்றின் உதவியால் தான் ரஷித் சிறையிலிருந்து தப்பியுள்ளான். மேலும் பத்திரிகையாளர்கள் உட்பட பலருடன் சிறையிலிருந்தபடியே ரஷித் தொடர்பு வைத்துள்ளான். அவர்களுடன் கைபேசியில் பேசியது மட்டுமின்றி அடிக்கடி குறுந்தகவல்களும் அனுப்பி வந்துள்ளான் என்று முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.

10ஆக சுருங்கியது இந்திய எம்பிக்கள் தொகை



இலங்கைக்கு வரும் இந்திய எம்.பிக்கள் குழு மேலும் பலவீனமாகியுள்ளது. இக்குழுவிலிருந்து தற்போது திரினமூல் காங்கிரஸ் மற்றும் ஐக்கிய ஜனதாதளம் ஆகியவையும் வெளியேறி விட்டன. இதனால் குழுவின் எண்ணிக்கை 10 ஆக சுருங்கிப் போய் விட்டது. 

சுஷ்மா சுவராஜ் தலைமையிலான இந்திய எம்.பிக்கள் குழு இலங்கை வரவுள்ளது. இந்தக் குழுவிலிருந்து ஏற்கனவே அதிமுக, திமுக ஆகியவை வெளியேறி விட்டன. இதனால் குழுவின் எண்ணிக்கை 14 என்பதிலிருந்து 12 ஆக குறைந்து விட்டது. 

இந்த நிலையில் திரினமூல் காங்கிரஸும், ஐக்கிய ஜனதாதளமும் இன்று விலகி விட்டன. திரினமூல் சார்பில் சுசாரு ரஞ்சன் ஹல்தாரும், ஐக்கிய ஜனதாதளம் சார்பில் சிவானந்த திவாரியும் வருவதாக இருந்தது. ஆனால் இருவரும் போகவில்லை. இதனால் குழுவின் எண்ணிக்கை தற்போது 10 ஆக சுருங்கிப் போய் விட்டது. 

இந்த பத்துப் பேரில் தற்போது தமிழகத்தைச் சேர்ந்தவர்களின் எண்ணிக்கை 5 ஆக உள்ளது. மற்றவர்கள் வட மாநில எம்.பிக்கள் ஆவர்.

கைவிடப்பட்ட 2 வயதுக் குழந்ததை




கல்முனை பொலிஸாரின் உதவியுடன் கல்முனை ஆதார வைத்தியசாலையில் சுமார் நான்கு மாதம் மதிக்கத்தக்க பெண் குழந்தையொன்று ஒப்படைக்கப்பட்டுள்ளது.


கல்முனை பஸ் தரிப்பிடத்தில் நின்ற அறிமுகம் இல்லாத பெண் ஒருவர் குறித்த குழந்தையை வைத்திருக்குமாறு அங்கிருந்த மற்றுமொறு பெண்ணிடம் கொடுத்துவிட்டு நீண்ட நேரம் திரும்பி வராததன் காரணமாக, குழந்தை பொலிஸார் மூலம் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளது.



இந்தக் குழந்தை தற்போது கல்முனை ஆதார வைத்தியசாலையில் பராமரிக்கப்பட்டு வருவதாக வைத்தியசாலையின் வைத்திய அத்தியட்சகர் டொக்டர் எம்.எஸ்.எம்.ஜாபீர் தெரிவித்துள்ளார்.



இதேவேளை குறித்த குழந்தையினை சிறுவர் நன்னடத்தைப் பிரிவின் கல்முனை அலுவலக பொறுப்பதிகாரி இன்று காலை நேரில் சென்று பார்வையிட்டுள்ளார்.

வலி. வடக்கு மீள்குடியேற்றம்




வலிகாமம் வடக்கு பகுதியில் பொதுமக்களின் மீள்குடியேற்றம் தொடர்பில் விஷேட கலந்துரையாடலொன்று இன்றையதினம் (15) வசாவிளான் மத்திய மகாவித்தியாலய மண்டபத்தில் இடம்பெற்றது. 


பாரம்பரிய கைத்தொழில்கள் மற்றும் சிறுதொழில் முயற்சி அபிவிருத்தி அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா அவர்களது முன்னிலையில் நடைபெற்ற இக்கலந்துரையாடலின் போது வலி வடக்குப் பகுதியில் இன்னமும் மீளக்குடியமர்த்தப்படாத மக்களின் நிலைப்பாடுகள் தொடர்பிலும் ஏற்கனவே மீளக்குடியமர்த்தப்பட்டுள்ள மக்களின் தேவைகள் தெடர்பிலும் விரிவாகக் கலந்துரையாடப்பட்டது.


இதன்போது பல்வேறு விடயங்களை அவதானத்தில் எடுத்துக் கொள்ளப்பட்டுள்ளதுடன் எதிர்காலத்தில் முன்னெடுக்கப்பட வேண்டிய நடவடிக்கைகள் குறித்தும் கலந்துரையாடப்பட்டமை குறிப்பிடத்தக்கதாகும்.


இக் கலந்துரையாடலில் தெல்லிப்பளை பிரதேச செயலாளர் திரு.ஸ்ரீ.மோகனன் அரச அதிகாரிகள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

யாழ் மாநகரம் விரைவில் சுத்தம் செய்யப்படும்



யாழ்.மாநகர சபையின் மூலம் முன்னெடுக்கப்பட்டு வருகின்ற யாழ். மாநகரின் சுத்தம் சுகாதாரம் தொடர்பிலான நடவடிக்கைகள் தொடர்பில் தொடர்ந்து தனது விமர்சனங்களை அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா அவர்கள் முன்வைத்து வரும் நிலையில் யாழ். மாநகரம் திருப்தி தரக் கூடிய நிலையில் சுத்தமாகக் காணப்படாததன் காரணமாக துப்பரவு செய்யும் பணியை பரீட்சார்த்த முறையில் முதலில் ஒரு குறிப்பிட்ட பகுதியை தனியார்த்துறை வசம் ஒப்படைப்பதற்கு அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா அவர்கள் தீர்மானித்துள்ள நிலையில் ஐக்கிய தொழிலாளர் சங்கத்தின் பிரதிநிதிகள் இன்றைய தினம் அமைச்சர் அவர்களை யாழ். அலுவலகத்தில் சந்தித்துக் கலந்துரையாடினர். 


இக்கலந்துரையாடலின் போது யாழ்.மாநகரின் சுத்தம் 24 மணி நேரமும் பேணப்படல் வேண்டும் என்பதை அமைச்சர் அவர்கள் வலியுறுத்தியுள்ள நிலையில் ஒரு மாத அவகாசம் கேட்டுக் கொண்ட ஐக்கிய தொழிலாளர் சங்கத்தினர் இந்த ஒரு மாத காலத்தில் யாழ். மாநகரை சுத்தமாக்கி தொடர்ந்து அதனைப் பேணுவதாக உறுதியளித்துள்ளனர்.


தங்களது சங்க உறுப்பினர்களான பணியாளர்களில் பலர் விடும் தவறுகள் காரணமாகவே இடையூறுகள் ஏற்படுவதை சுட்டிக்காட்டிய பிரதிநிதிகள் இனி இவற்றைத் தவிர்த்து உரிய முறையில் பணி நடவடிக்கைகளில் ஈடுபடுவதாகவும் தெரிவித்தமை குறிப்பிடத்தக்கது.

வடக்கு மாகாண தனியார் பேரூந்துகள் தொடர்பில் அமைச்சருடன் ஆலோசனை



வடக்கு மாகாணத்தின் தனியார் பேரூந்து சங்கங்கள் எதிர்நோக்கி வரும் பிரச்சினைகள் தொடர்பிலான உயர்மட்ட கலந்துரையாடலொன்று இன்றையதினம் (16) பாரம்பரிய கைத்தொழில்கள் மற்றும் சிறுதொழில் முயற்சி அபிவிருத்தி அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா அவர்களது தலைமையில் யாழ் மாவட்ட செயலகக் கேட்போர் கூடத்தில் இடம்பெற்றது.

யாழ்ப்பாணம் முல்லைத்தீவு கிளிநொச்சி வவுனியா மன்னார் ஆகிய மாவட்டங்களைச் சேர்ந்த தனியார் பேரூந்து சங்கங்களின் பிரதிநிதிகளும் வடக்கு மாகாண தனியார் பேரூந்து உரிமையாளர்களது சமாசப் பிரதிநிதிகளும் இக்கலந்துரையாடலில் கலந்து கொண்டு தங்களது பிரச்சினைகளைத் தனித்தனியாக முன்வைத்தனர்.

குறிப்பாக யாழ்ப்பாணத்திலிருந்து கொழும்பு நோக்கிச் செல்லும் கடுகதி பேரூந்துகள் வவுனியாவுக்கு உட்பட்ட பகுதிகளில் பிரயாணிகளை ஏற்றி இறக்குவது நிறுத்தப்படல் வேண்டுமென்ற கோரிக்கை இங்கு முன்வைக்கப்பட்டது.


அத்துடன் கொழும்பு தவிர்ந்த ஏனைய தென்பதி நகரங்களுக்கான வீதி அனுமதிப்பத்திரங்கள் தங்களுக்கு வழங்கப்படவில்லை என்ற விடயமும் முன்வைக்கப்பட்டது.

முல்லைத்தீவிற்கான வவுனியா பேரூந்துகளின் வருகை தவிர்க்கப்படல் முல்லைத்தீவு மாவட்ட தனியார் பேரூந்து உரிமையாளர்களுக்கு நன்மைபயக்குமென்ற விடயமும் முன்வைக்கப்பட்டது.


அத்துடன் வடக்கு மாகாணத்தைச் சேர்ந்த அனைத்து மாவட்ட தனியார் பேரூந்து சங்கங்களிலும் ஒன்றிணைந்து செயற்பட வேண்டியதன் அவசியம் இங்கு பொதுவாக வலியுறுத்தப்பட்டது.

இந்நிலையில் மாவட்ட செயலாளர்கள் அந்தந்த மாவட்டங்களுக்குரிய தனியார் பேரூந்து சங்கங்களுடன் கலந்துரையாடி இணக்கம் கண்டு. சமாசத்தை ஒழுங்குபடுத்திய பின்னர் ஏனைய பிரச்சினைகள் தொடர்பில் முடிவெடுக்கப்படுமென அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா அவர்கள் தெரிவித்துள்ளார்.


இக்கலந்துரையாடலில் ஈ.பி.டி.பி பாராளுமன்ற உறுப்பினரும் பாராளுமன்றக் குழுக்களின் பிரதித் தலைவருமான முருகேசு சந்திரகுமார் ஈ.பி.டி.பி. பாராளுமன்ற உறுப்பினர் சில்வேஸ்;த்திரி அலன்ரின் (உதயன்) யாழ் மாவட்ட செயலாளர் இமெல்டா சுகுமார் கிளிநொச்சி மாவட்ட செயலாளர் ரூபவதி கேதீஸ்வரன் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா மீள்குடியேற்றம் குறித்து அரச அதிபருடன் ஆலோசனை




யாழ்ப்பாணம் மற்றும் கிளிநொச்சி மாவட்டங்களில் மீள்குடியேற்ற நடவடிக்கைகள் மீள் குடியேற்றப்பட்டுள்ள மக்களது தேவைகள் குறைபாடுகள் மற்றும் நிவாரண வழங்கல் போன்ற விடயங்கள் தொடர்பில் ஆய்வு ரீதியிலான கலந்துரையாடலொன்று இன்றைய தினம் (16) யாழ் மாவட்ட செயலகக் கேட்போர் கூடத்தில் இடம்பெற்றது.




பாரம்பரிய கைத்தொழில்கள் மற்றும் சிறுதொழில் முயற்சி அபிவிருத்தி அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா அவர்களது தலைமையில் நடைபெற்ற இக்கலந்துரையாடலின் போது இன்னமும் மீளக் குடியேற்றம் மேற்கொள்ளப்படாத பகுதிகள் குறித்தும் பாவனைக்கு விடப்படாத தனியார் மற்றும் பொதுக் கட்டிடங்கள் வீடுகள் தொடர்பிலும் விசேட அவதானம் செலுத்தப்பட்டுள்ளதுடன் வழங்கப்படாதிருக்கும் நிவாரணங்கள் தொடர்பிலும் கவனஞ் செலுத்தப்பட்டது.





இக் கூட்டத்தில் ஈ.பி.டி.பி. பாராளுமன்ற உறுப்பினரும் பாராளுமன்றக் குழுக்களின் பிரதித் தலைவருமான முருகேசு சந்திரகுமார் யாழ் மாவட்ட செயலாளர் இமெல்டா சுகுமார் கிளிநொச்சி மாவட்ட செயலாளர் ரூபவதி கேதீஸ்வரன் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

கடற்தொழிலாளர் சங்கப் பிரதிநிதிகள் டகிளஸ் உடன் சந்திப்பு



யாழ் மாவட்ட கடற்தொழிலாளர் சங்கங்களின் பிரதிநிதிகள் இன்றைய தினம் (16) மாலை பாரம்பரிய கைத்தொழில்கள் மற்றும் சிறுதொழில் முயற்சி அபிவிருத்தி அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா அவர்களைச் சந்தித்துக் கலந்துரையாடினர்.

அமைச்சர் அவர்களது யாழ் அலுவலகத்தில் இடம்பெற்ற இச்சந்திப்பின் போது, கடற்தொழிலாளர்கள் எதிர்நோக்கி வருகின்ற முக்கியப் பிரச்சினைகள் குறித்து விரிவாகக் கலந்துரையாடப்பட்டது. 


இதன்போது இந்திய குழுவைப் படகுகளினால் தொடரும் பிரச்சினைகள் தொடர்பில் பல்வேறு முறைப்பாடுகளை சங்கங்களின் பிரதிநிதிகள் முன்வைத்தனர். 

இப்பிரச்சினை தொடர்பில் தொடர்ந்து இரு தரப்பினருக்குமிடையில் பேச்சுவார்த்தைகள் இடம்பெற்றுள்ள நிலையில் இப்பிரச்சினையை சுமுகமாகத் தீர்க்கும் வகையில் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட வேண்டும் என்பது தொடர்பில் அவதானஞ் செலுத்தப்பட்டது. 


மேலும் வான் அகழ்வு அணை கட்டுதல் போன்ற விடயங்கள் குறித்தும் இதன்போது ஆராயப்பட்டது. 

இக்கலந்துரையாடலில் ஈ.பி.டி.பி. பாராளுமன்ற உறுப்பினர் சில்வேஸ்திரி அலென்ரின் (உதயன்) அவர்களும் கலந்து கொண்டார்.

புத்தாண்டு காலப்பகுதியில் வீதி விபத்துக்கள் அதிகரிப்பு



கடந்த வருடத்துடன் ஒப்பிடுகையில் இம்முறை புத்தாண்டு காலப்பகுதியில் தேசிய வைத்தியசாலையில் பதிவான வீதி விபத்துக்களின் எண்ணிக்கை ஒன்பது வீதத்தால் உயர்வடைந்துள்ளது.

இன்று காலை ஏழு மணியுடன் நிறைவடைந்த 72 மணித்தியாலங்களில் சுமார் 680 க்கும் அதிகமானவர்கள் வெளிநோயளர் பிரிவில் சிகிச்சை பெற்றுள்ளதாக திடீர் விபத்துக்கள் பிரிவின் பணிப்பாளர் டொக்டர் பிரசாத் ஆரியவங்ச குறிப்பிட்டார்.

337 பேர் தங்கியிருந்து வைத்தியசாலையில் சிகிச்சை பெறுவதாக குறிப்பிட்ட திடீர் விபத்துக்கள் பிரிவின் பணிப்பாளர், வெளிநோயாளர் பிரிவில் சிகிச்சை பெற்றவர்களின் எண்ணிக்கை 2.2 வீதத்தால் குறைந்துள்ளதாக கூறினார்.

தங்கியிருந்து சிகிச்சை பெறுவதற்காக அனுமதிக்கப்படுகின்றவர்களின் எண்ணிக்கையில் 20 வீத அதிகரிப்பு ஏற்பட்டுள்ளது.

அத்துடன் வீதி விபத்துக்களுக்கு இலக்கான 183 பேர் வைத்தியசாலையை நாடியுள்ளதாகவும் இந்த எண்ணிக்கையானது கடந்த வருடத்துடன் ஒப்பிடுகையில் ஒன்பது வீத அதிகரிப்பாகும் என்றும் டொக்டர் பிரசாத் ஆரியவங்ச குறிப்பிட்டார்.

வீட்டு விபத்துக்கள் மற்றும் பட்டாசு அனர்த்தங்கள் என்பவற்றில் இம்முறை வீழ்ச்சி ஏற்பட்டுள்ளதாகவும் தேசிய வைத்தியசாலையின் திடீர் விபத்துக்கள் பிரிவின் பணிப்பாளர் மேலும் கூறினார்.


ஆசியாவில் மலை பனி இறுகி, திண்மமாகிறது!




புவி வெப்பமடைவதால் பனி மலைகள் உருகும் போக்குக்கு மாறாக ஆசியாவின் காரகோரம் மலையில் பனி இறுகி, திண்மமாகிவருவதாக ஆய்வாளர்கள் கண்டறிந்துள்ளார்கள். 

இமாலய பிராந்தியத்தின் மேற்காக உள்ள காரகோரம் மலைத்தொடரில் பனியின் அளவு அதிகரித்து வருவதை செய்மதி தகவல்கள் மூலமாக ஒரு பிரஞ்சு விஞ்ஞானிகள் குழு கண்டறிந்துள்ளது. 

புவி வெப்பமடையும் போக்குக்கு ஏற்ப, இமாலயத்தின் ஏனைய பகுதிகளில் உள்ள பனி மலைகள் உருகிவரும் நிலையில், இந்த மலை மாத்திரம் திண்மமாகி வருவதன் காரணம் இன்னமும் அறியப்படவில்லை. 

இந்த பிராந்தியத்தில் உள்ள பனிமலைகள் 100 கோடி மக்களுக்கு நீர் வழங்கும் மூலமாக இருக்கின்ற போதிலும், அவை குறித்த ஆய்வுகள் பெரிதாக எதுவும் நடக்கவில்லை. 

இமாலய பிராந்தியத்தில் உள்ள மொத்த பனியும் 2035 ஆம் ஆண்டளவில் உருகிப் போய்விடும் என்று 2007 ஆம் ஆண்டு வெளியான ´´காலநிலை மாற்றத்துக்கான அரசாங்கங்களுக்கு இடையிலான குழுவின் அறிக்கை´´ கூறியதை அடுத்து, இமாலய பனி மலைகளின் விவகாரம் ஒரு முக்கிய அம்சமாக பலராலும் பேசப்படுகிறது. 

இமாலயத்தின் ஒரு பகுதியாக இருக்கின்ற போதிலும், காரகோரம் மலை ஒரு வேறுபட்ட தொடராகவே காணப்படுகிறது. 

இந்த மலைச்சிகரங்கள் பொதுவில் சென்றுவருவதற்கு மிகவும் கடினமான பகுதியாகவே இருக்கிறது. இருந்த போதிலும் அங்கு ஆய்வுகள் அதிகரிக்கப்பட வேண்டும் என்ற கோரிக்கை அதிகரித்து வருகிறது. 

உலகின் மிகப்பெரிய முட்டை



உலகின் மிகப்பெரிய ஈஸ்டர் முட்டை  ஆர்ஜன்டினாவில் தயாரிக்கப்பட்டு காட்சிக்கு வைக்கப்பட்டுள்ளது. 

4 தொன் நிறையும் 27 அடி உயரமும் 16அடி அகலமும் கொண்டதாக இந்த சொக்லேட் முட்டை தயாரிக்கப்பட்டுள்ளது.

4,000 கிலோகிராம் சொக்லேட்டை பயன்படுத்தி 27 ஊழியர்கள்  இணைந்து இரண்டு வார காலத்தில் இந்த ஈஸ்டர் முட்டையை தயாரித்துள்ளனர். 

உலகின் மிகப் பெரிய ஈஸ்டர் முட்டை என இம்முட்டை அங்கீகரிக்கப்பட்டுள்ளது.


பலவகையாலான அச்சு தயாரிக்கப்பட்டு அதன்பின் சொக்லேட் முட்டை தயாரிக்கப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதற்கு முன் பெல்ஜியத்தில் தயாரிக்கப்பட்ட 27.3 அடி உயரமான சொக்;லேட் முட்டையின் சாதனையை இம்முட்டை முறியடித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

தமிழ் குடும்பங்கள் மீது தாக்குதல்! 7 வீடுகள் எரிந்து நாசம்


காலி - எல்பிட்டி - திலிதுற தோட்டத்தில் வசிக்கும் தமிழ் குடும்பங்கள் மீது பெரும்பான்மை சிங்கள யுவதிகள் சிலர் தாக்குதல் நடத்தி அவர்களது வீடுகளுக்கு தீயிட்டுள்ளதோடு பெறுமதியான பொருட்களையும் திருடிச் சென்றுள்ளனர். 

இந்த சம்பவம் குறித்து அத தெரண தமிழிணையம் பெற்றுக் கொண்ட நம்பகரமான, உறுதிப்படுத்தப்பட்ட தகவல்கள்படி நடந்தவை வருமாறு, 

எல்பிட்டி - திலிதுற தோட்டத்தில் உள்ள இராணுவ வீரர் ஒருவர் (சாதாரண இராணுவ சிப்பாய்) விடுமுறையில் ஊருக்கு வரும்போது அங்குள்ள தமிழ் குடும்பங்களை சந்தித்து தன்னை ´சேர்´ அல்லது ´மாத்தயா´ என்றுதான் அழைக்க வேண்டும் என அச்சுறுத்தி வந்துள்ளார். 

எனினும் இலங்கை நாட்டு பிரஜைகள் என்பதால் அந்த இராணுவ சிப்பாய்க்கு அடிபணிய திலிதுற தோட்ட தமிழ் குடும்பங்கள் மறுத்து வந்துள்ளனர். இதனால் இந்த மக்கள் மீது இராணுவ சிப்பாய்க்கு கடும் கோபம் இருந்து வந்துள்ளது. 

கடந்த 11ம் திகதி புதுவருட விடுமுறையில் வந்துள்ள இராணுவ சிப்பாய் (றுவான் குமார என்பது பெயர் என தெரியவருகிறது) திலிதுற தோட்டத்திற்குச் சென்று இளைஞர் ஒருவரிடம் தன்னை ´சேர்´ என அழைக்கும்படி வற்புறுத்தியுள்ளார். 

எனினும் குறித்த இளைஞன் அதற்கு மறுப்புத் தெரிவித்ததால், எதிர்வரும் புதுவருடத்தில் உங்களை பார்த்துக் கொள்கிறேன் என குறித்த இராணுவ சிப்பாய் கூறிவிட்டு சென்றுள்ளார். 

அவர் சொன்னபடியே நேற்று (14ம் திகதி) காலை 10 மணியளவில் திலிதுற தோட்டத்துக்கு வந்த இராணுவ சிப்பாய் தன்னை ´சேர்´ என அழைக்க மறுத்த இளைஞனை அவருடைய வீட்டுக்குள் போட்டு கடுமையாகத் தாக்கியுள்ளார். 

இதனையடுத்து அருகில் இருந்த தமிழ் இளைஞன் ஒருவர் அவ்விடத்திற்கு வந்து ஏன் அடிக்கிறீர்கள் என நியாயம் கேட்டுள்ளார். 

இதன்போது குறித்த இடத்திற்கு திடீரென வந்த 25 - 30 சிங்கள இளைஞர்கள் இவ்விருவர் மீது தாக்குதல் நடத்திவிட்டு அங்கிருந்த 7 வீடுகளை தீயிட்டு எரித்துள்ளனர். 

அதுமட்டுமல்லாது முச்சக்கரவண்டி, மோட்டார் சைக்கிள் போன்றவற்றிற்கும் தீ வைத்து எரித்துள்ளனர். 

மேலும் வீட்டில் இருந்து தங்க நகை, பணம் மற்றும் வாகன உரிமம், தொலைக்காட்சி என்பவற்றை களவாடிச் சென்றுள்ளனர். 


இந்த தாக்குதல் சம்பவத்தில் சுமார் 90 லட்சம் ரூபா நட்டம் ஏற்பட்டுள்ளதாக பாதிக்கப்பட்ட தமிழ் மக்கள் தெரிவிக்கின்றனர். 

தாக்குதல் சம்பவம் குறித்து எல்பிட்டி பொலிஸ் நிலையத்தில் உடனடியாக முறைப்பாடு செய்யப்பட்டதை அடுத்து பொலிஸாரும் அங்கு வந்துள்ளனர். பொலிஸார் வந்து நின்றதை கண்டும் சிங்கள இளைஞர்கள் தமிழர்களின் வீட்டுக்கு தீ வைத்து எரித்துள்ளதாக கண்ணால் கண்ட சாட்சிகள் தெரிவிக்கின்றன. 

பொலிஸார் அவ்விடத்திற்கு வந்து நிலைமையை சமாதானம் செய்யவே அதிக முயற்சி செய்துள்ளனர். சம்பவத்துடன் தொடர்புடையவர்கள் என்ற சந்தேகத்தில் இரண்டு தமிழ் இளைஞர்களை பொலிஸார் கைது செய்ததோடு மேலும் சில தமிழ் இளைஞர்களை பெயர் குறிப்பிட்டு தேடி வந்துள்ளனர். 

இந்த தாக்குதல் சம்பவத்தின் போது காயமடைந்த இராணுவ சிப்பாய் வைத்தியசாலையில் இருந்து தப்பிச் சென்றுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. சமிந்தகுமார் மற்றும் சந்திரகுமார் என்ற இரு இளைஞர்களே கைது செய்யப்பட்டுள்ளனர். 

எல்பிட்டி - திலிதுற தோட்டத்தில் சுமார் 520 தமிழ் குடும்பங்களைச் சேர்ந்த 3400 தமிழர்கள் வாழ்ந்து வருகின்றனர். 

கல்வித் துறையில் பெரிய முன்னேற்றம் இல்லையே தவிர இந்த மக்கள் தேயிலை தோட்டத்தில் வேலை செய்து நல்ல செல்வம் உடையவர்களாக கௌரவ வாழ்க்கை வாழ்ந்து வருகின்றனர். 

நாட்டில் யுத்தம் முடிவடைந்து இணங்களுக்கு இடையில் நல்லிணக்கத்தை ஏற்படுத்துவதற்கான முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வரும் நிலையில் சிறுபான்மை மக்கள் மீதான இவ்வாறான தாக்குதல்கள் பிளவை வலுபெறச் செய்யுமே தவிர ஒற்றுமையை ஏற்படுத்த ஒருநாளும் வழி ஏற்படுத்தாது என சமூக ஆர்வளர்கள் குறிப்பிடுகின்றனர். 

இலங்கையில் பலஸ்தீன ஜனாதிபதி...



பலஸ்தீன ஜனாதிபதி முஹம்மர் அப்பாஸ் இரண்டு நாள் உத்தியோகபூர்வ விஜயத்தை மேற்கொண்டு நேற்றிரவு கொழும்பு வந்தடைந்தார். 

வெளிவிவகார அமைச்சர் பேராசிரியர் ஜீ.எல்.பீரிஸ் அவரை விமான நிலையத்தில் வைத்து வரவேற்றார். சிரேஷ்ட அமைச்சர் அதாவுத செனவிரத்ன தலைமையிலான குழுவினரும் இதில் கலந்துகொண்டனர். 

இலங்கை வந்துள்ள பலஸ்தீன ஜனாதிபதி - ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ் உள்ளிட்ட முக்கிய பிரமுகர்களை சந்தித்து இரு நாட்டு உறவுகள் குறித்து கலந்துரையாடவுள்ளார். 

சுதந்திர அரசாக மாற்றமடைய பலஸ்தீனம் இஸ்ரேலுடன் மோதலில் ஈடுபட்டு வரும் நிலையில் இலங்கை பலஸ்தீனத்துடன் நெருங்கிய உறவுகளை பேணி வருகின்றமை குறிப்பிடத்தக்கது. 

மூன்று மாதங்களில் 43 டெங்கு மரணங்கள்



இந்த வருடத்தின் கடந்த மூன்று மாதங்களில் மாத்திரம் டெங்கு நோயினால் பாதிக்கப்பட்டு 43 பேர் உயிரிழந்துள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது. 

இந்த மூன்று மாத காலத்தில் 9657 பேர் டெங்கு நோயினால் பாதிக்கப்பட்டுள்ளனர். 

இந்த நோயாளர்களில் 50 சதவீதமானோர் மேல் மாகாணத்தைச் சேர்ந்தவர்களாவர். 

ஜனவரி மாதத்தில் அதிக டெங்கு நோயாளர்கள் இனங்காணப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சு கூறியுள்ளது. 

மழையுடன் கூடிய காலநிலை நீடிப்பதால் டெங்கு நுளம்பு பரவாத வண்ணம் சூழலை பாதுகாக்குமாறு சுகாதார அமைச்சு பொது மக்களை அறிவுறுத்தியுள்ளது. 

ஐநா செயற்பாட்டாளர் வீட்டின் மீது தாக்குதல்



மட்டக்களப்பு நகரின் கோவில் வீதியில் உள்ள ஐ.நாவின் செயற்பாடுகளை ஒருங்கிணைப்பதற்குப் பொறுப்பான பொறியியலாளரின் வீட்டின் மீது நேற்று (15) ஞாயிற்றுக்கிழமை இரவு தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. 

மட்டக்களப்பில் ஐ.நாவினால் மேற்கொள்ளப்படும் செயற்பாடுகளை ஒருங்கிணைப்பதற்கான பொறுப்பு வாய்ந்த அதிகாரியாகப் பணியாற்றும் இளங்கோவன் காண்டீபன் என்ற பொறியியலாளரின் வீட்டின் மீதே நேற்று இரவு 7.45 மணியளவில் குண்டுத் தாக்குதல் நடத்தப்பட்டது. 

இந்தத் தாக்குதலில் வீட்டின் கதவுகள், யன்னல்கள் உடைந்து சேதமாகின. எனினும் எவருக்கும் காயங்கள் ஏற்படவில்லை. 

இந்தத் தாக்குதல் சம்பவம் தொடர்பாக பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டுள்ளனர்.