கடந்த வருடத்துடன் ஒப்பிடுகையில் இம்முறை புத்தாண்டு காலப்பகுதியில் தேசிய வைத்தியசாலையில் பதிவான வீதி விபத்துக்களின் எண்ணிக்கை ஒன்பது வீதத்தால் உயர்வடைந்துள்ளது.
இன்று காலை ஏழு மணியுடன் நிறைவடைந்த 72 மணித்தியாலங்களில் சுமார் 680 க்கும் அதிகமானவர்கள் வெளிநோயளர் பிரிவில் சிகிச்சை பெற்றுள்ளதாக திடீர் விபத்துக்கள் பிரிவின் பணிப்பாளர் டொக்டர் பிரசாத் ஆரியவங்ச குறிப்பிட்டார்.
337 பேர் தங்கியிருந்து வைத்தியசாலையில் சிகிச்சை பெறுவதாக குறிப்பிட்ட திடீர் விபத்துக்கள் பிரிவின் பணிப்பாளர், வெளிநோயாளர் பிரிவில் சிகிச்சை பெற்றவர்களின் எண்ணிக்கை 2.2 வீதத்தால் குறைந்துள்ளதாக கூறினார்.
தங்கியிருந்து சிகிச்சை பெறுவதற்காக அனுமதிக்கப்படுகின்றவர்களின் எண்ணிக்கையில் 20 வீத அதிகரிப்பு ஏற்பட்டுள்ளது.
அத்துடன் வீதி விபத்துக்களுக்கு இலக்கான 183 பேர் வைத்தியசாலையை நாடியுள்ளதாகவும் இந்த எண்ணிக்கையானது கடந்த வருடத்துடன் ஒப்பிடுகையில் ஒன்பது வீத அதிகரிப்பாகும் என்றும் டொக்டர் பிரசாத் ஆரியவங்ச குறிப்பிட்டார்.
வீட்டு விபத்துக்கள் மற்றும் பட்டாசு அனர்த்தங்கள் என்பவற்றில் இம்முறை வீழ்ச்சி ஏற்பட்டுள்ளதாகவும் தேசிய வைத்தியசாலையின் திடீர் விபத்துக்கள் பிரிவின் பணிப்பாளர் மேலும் கூறினார்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக