//]]>3

ஞாயிறு, 27 மே, 2012

தமிழரசுக்கட்சி வருங்காலத்தில் மாகாத்மா காந்தியாம்


இலங்கை அரசாங்கத்திடம் முன்வைத்த நியாயமான கோரிக்கைகளை மறுதலிக்குமாக இருந்தால், இலக்குகளை அடைவதற்காக நாம் காந்தீய வழியில் வன்முறையற்ற சாத்வீக போராட்டம் ஒன்றை உரிய நேரத்தில் ஆரம்பித்து, அவற்றை அடையும் வரை போராடுவோம் என தமிழரசுக்கட்சியின் 14வது தேசிய மாநாட்டில் தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது.
நேற்று மட்டக்களப்பு அமெரிக்க மிஷன் மண்டபத்தில் இடம்பெற்ற தமிழரசுக்கட்சியின் 14வது தேசிய மாநாட்டில் கட்சியின் பொதுச்செயலாளர் மாவை சேனாதிராசாவினால் தீர்மானம் வெளியிடப்பட்டது.
அதில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,
அர்த்தமுள்ள அதிகாரப்பகிர்வு அவசியம்:
1. அர்த்தமுள்ள அதிகூடிய அதிகாரப் பகிர்வு ஊடாக வடகிழக்கு பிராந்தியத்தில் எமது மக்கள் தமது அரசியல், சமூக, பொருளாதார, கல்வி, கலாச்சார அபிலாஷைகளைப் பூர்த்தி செய்யும் வகையில் ஆட்சியதிகாரங்கள் அவர்களுக்கு கையளிக்கப்பட வேண்டும்.
இப்படியானதொரு அரசியல் தீர்வு தமிழ் மக்கள் சார்பில் முன்வைக்கப்பட்டும் கூட அரசாங்கம் தனது நிலைப்பாட்டை வெளிப்படுத்தாமையினால் இலங்கையின் தேசியப் இனப் பிரச்சனைக்கு இன்னமும் தீர்வு காணப்படவில்லை.
மேலும் காலத்தை வீணடிக்காமல் இந்த அடிப்படையிலும் முஸ்லிம் மக்களது அபிலாஷைகளை அங்கீகரிக்கும் வகையிலும் அரசியல் தீர்வொன்றுக்கு அரசாங்கம் இணங்க வேண்டுமென இலங்கைத் தமிழ் அரசுக் கட்சியின் 14வது தேசிய மாநாடு வேண்டுகோள் விடுக்கிறது.
மீள்குடியேற்றம், புனர்வாழ்வு:
2. வடகிழக்கு பிராந்தியத்தில் போர்ச்சு10ழலினால் இடம் பெயர்ந்த தமிழ், முஸ்லிம் மக்கள் அனைவரும் உடனடியாக மீண்டும் தங்கள் சொந்த இடங்களில் வீட்டு வசதிகளுடன் மீள்குடியேற்றப்பட்டு, புனர்வாழ்வளிக்கப்பட்டு அவர்களுடைய வாழ்வாதாரங்கள் கட்டியெழுப்பப்பட வேண்டும்.
போரினால் நிர்க்கதியாக்கப்பட்ட வாழ்விழந்த பெண்கள் (தலைமை தாங்கும் பெண்கள்), பெற்றோரை இழந்த பிள்ளைகள், மாற்றுத்திறனாளர்கள் ஆகியோருக்கு புனர்வாழ்வும் மறுவாழ்வும் அளிக்கப்பட வேண்டும்.
இந்தக் கடமைகளின் மேற்கொள்வதற்கு மக்களால் ஜனநாயக ரீதியாக தேர்ந்தெடுக்கப்பட்ட மக்கள் பிரதிநிதிகள் உள்வாங்கப்பட வேண்டும். இனமத அரசியல் பாரபட்சமின்றி நிதி ஒதுக்கீடுகள் தேவைகளைப் பூர்த்தி செய்யும் வகையில் பகிர்ந்தழிக்கப்பட வேண்டும்.
இராணுவ ஆக்கிரமிப்பு நிலை விலக்கல்:
3. வடகிழக்குப் பிராந்தியம் இராணுவ மயமாக்கப்பட்ட நிலையிலிருந்து விடுவிக்கப்பட வேண்டும். இதன் மூலம் மக்களின் நில உரிமைஇ வாழ்வாதார உரிமை என்பன சுதந்திரமாக செயற்படுத்தும் நிலமை உருவாக வேண்டும்.
மக்களின் அன்றாட வாழ்வில் இடையூறாக நிற்கும் இராணுவத் தலையீடு முழுமையாக இல்லாதொழிக்கப்பட வேண்டும். இதே போன்று குடியியல் நிர்வாகத்தில் உள்ள இராணுவத் தலையீடு முற்றாக அகற்றப்பட வேண்டும்.
வடகிழக்கு பிராந்தியத்தில் தலைவிரித்தாடும் மக்களுக்கெதிராக மனித உரிமை மீறல்கள் உடனடியாக நிறுத்தப்பட வேண்டும். வடகிழக்கில் தமிழ் மொழி தெரியாத சிங்கள இராணுவ ஆளுனர்கள், தமிழ் மொழி தெரியாத சிங்கள அரச அதிபர்கள், சிங்கள அதிகாரிகள் முற்றாக அகற்றப்பட வேண்டும்.
காணாமல் போனோர், கைதிகள் பிரச்சினைக்கு விரைந்து தீர்வு:
4. காணாமல் போயுள்ளவர்கள், சரணடைந்த பின் காணாமல் போனவர்கள் சம்மந்தமாக விசாரணைகள் நடாத்தப்பட்டு இவற்றுக்கு பொறுப்பாக உள்ளவர்கள் கண்டுபிடிக்கப்பட்டு அவர்களுக்கு தண்டனை வழங்குவதோடு பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு மரண சான்றிதல் மற்றும் பொருத்தமான நஷ்ட ஈடு வழங்கப்பட வேண்டும்.
பயங்கரவாத தடைச்சட்டத்தின் கீழும், அவசரகால சட்டத்தின் கீழும் தடுப்புக் காவலில் அல்லல் உறும் தமிழ் அரசியல் கைதிகள் அனைவருக்கும் 1970ஆம், 1980ஆம் ஆண்டுகளில் பின்பற்றப்பட்ட முன்மாதிரிகளைப் பின்பற்றி பொது மன்னிப்பு வழங்கப்பட வேண்டும். வாழ்க்கை செலவு சுமையிலிருந்து மக்களை விடுவித்து இயல்பு வாழ்வை ஏற்படுத்துதல்.
5. அதிகரித்து வரும் வாழ்க்கைச் செலவினால் முழு நாடும் அல்லல்படும் சூழ்நிலையில், யுத்தத்தினால் பாதிக்கப்பட்டு வருமானம் வாழ்வாதாரங்களை இழந்த வடகிழக்கு பிராந்திய மக்களின் நிலைமை மிகவும் மோசமாக உள்ளது.
அவர்களுக்கு நிவாரணம் வழங்கும் வகையிலான வழிவகைகள் செய்து கொடுக்கப்பட வேண்டும். வேலையற்றவர்களுக்கும், விசேஷமாக வடகிழக்கு பிராந்தியத்தில் வாழும் வேலையற்ற பட்டதாரிகளுக்கு வேலை வாய்ப்புக்கள் வழங்கப்பட வேண்டும்.
பொதுச் சேவையில் 5 வீதத்திற்க்கு குறைந்திருக்கும் தமிழர்களின் எண்ணிக்கையின் காரணமாக தமிழ் மக்கள் பெரிதும் பாதிப்படைந்துள்ளார்கள். அதனால் பொதுச் சேவையில் அவர்களுடைய விகிதாசாரம் தேசிய விகிதாசார அடிப்படையில் தாமதமின்றி உயர்த்தப்பட வேண்டும்.
புலம் பெயர்ந்த உறவுகளுக்கு:
6. புலம் பெயர்ந்த தமிழ் மக்கள், தாயகத்திலுள்ள தமிழ் மக்களுடைய அரசியல் அபிலாஷைகளை உணர்ந்து தமிழ் மக்களுடைய நம்பிக்கையுள்ள பிரதிநிதிகள் முன்னெடுக்கும் செயற்திட்டங்களுக்கு அவற்றை அடைவதற்கு ஆதரவாக செயற்படுமாறு புலம் பெயர்ந்த உறவுகளுக்கு வேண்டுகோள் விடுக்கிறோம்.
அத்தோடு மீள்குடியேற்ற விடயங்களில் எமது மக்களுக்கு வேண்டிய பொருள் உதவி, நிபுணத்துவ உதவி போன்றவற்றை ஒரு குறித்த வேலைத்திட்டத்தின் அடிப்படையில் வழங்க முன்வர வேண்டுமென்றும் புலம் பெயர்ந்த தமிழ் உறவுகளிடம் வேண்டுகோள் விடுக்கிறோம்.
சர்வதேச சமூகத்திற்கு:
7. இலங்கைத் தமிழ் மக்களின் அரசியல் உரிமைகள் மனித உரிமை பாதுகாப்பு சம்மந்தமாக சர்வதேச சமூகம் இதுவரை ஆற்றியிருக்கும் பங்களிப்புக்காக அவர்களுக்கு நன்றி சொல்லும் அதே வேளையில், தொடர்ந்து தமிழ் மக்களை வன்முறையிலிருந்து பாதுகாப்பதற்கும் தமிழ் மக்களின் மனித உரிமைகள், அரசியல் உரிமைகள் ஆகியவற்றை உறுதி செய்யும் வகையில் சர்வதேச சமூகம் தேவையான உதவிகளையாற்றி அதன் மூலமாக நாட்டில் நீதி, நேர்மை, கௌரவம், சமத்துவம் என்ற அடிப்படையில் விசுவாசமான புரிந்துணர்வும் சமத்துவமும் நல்லுணர்வும் ஏற்படுத்த வழி செய்ய வேண்டும் என்று வேண்டுகோள் விடுக்கிறோம்.
தாயக மக்களுக்கு:
8. எம்மால் நியாயமான முறையின் முன்வைக்கப்பட்டுள்ள கோரிக்கைகளுக்கு எமது மக்கள் பரிபூரணமான ஆதரவை நல்க வேண்டுமென்று கேட்டுக் கொள்ளும் அதே வேளையில் இவற்றை அடைவதற்கு இந் நாட்டின் சிங்கள, முஸ்லிம் சகோதரர்களும் ஏனைய முற்போக்கு சக்திகளும் தமது ஒத்துழைப்பை நல்க வேண்டுமென வினயமாக வேண்டுகிறோம். 
சர்வதேச விசாரணை

9. இலங்கையில் 2009 மேயில் முடிவடைந்த போரின்போது சர்வதேச மனிதாபிமான சட்டங்கள், உரிமைகள் மீறப்பட்ட குற்றச்சாட்டுக்கள் தொடர்பில் ஐ.நா.செயலாளர் நாயகத்தால் நியமிக்கப்பட்ட நிபுணர்வின் சிபாரிசுகளின் படி குற்றச்சாட்டுகளை விசாரணை செய்வதற்கு, சர்தேவ விசாரணை ஒன்று ஏற்படுத்தப்பட வேண்டும்.
அதேபோல் இலங்கை ஜனாதிபதியினால் நியமிக்கப்பட்ட கற்றுக்கொண்ட பாடங்கள் நல்லிணக்க ஆணைக்குழுவால் செய்யப்பட்ட பொறுப்புக்கூறும் கடப்பாடு தவிர்ந்த ஏனைய பரிந்துரைகள் நடைமுறைப்படுத்தவேண்டும்.
ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமை பேரவையின் 2012ஆம் ஆண்டு மார்ச் அமர்வில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் முழுமையாக அமுல்படுத்தப்பட்டு நிறைவேற்றப்பட்டால் நாட்டில் விசுவாசம், புரிந்துணர்வு ஏற்பட்டு கௌரவமான சமாதானம் ஏற்படும்.
சாத்வீகப் போராட்டத்துக்கு அறிவித்தல்:
இந்த மாநாட்டில் இலங்கை அரசாங்கத்திடம் மிகவும் நியாயமான கோரிக்கைகளை முன் வைத்திருக்கிறோம். இவற்றை அரசாங்கம் மறுதலிக்குமாக இருந்தால் இந்த நியாயமான இலக்குகளை அடைவதற்காக நாம் காந்தீய வழியில் வன்முறையற்ற சாத்வீக போராட்டம் ஒன்றை உரிய நேரத்தில் உரிய முறையில் ஆரம்பித்து அவற்றை அடையும் வரை போராடுவோம் என்று தெளிவாகவும் வெளிப்படையாகவும் தமிழ் அரசுக் கட்சியின் 14வது தேசிய மாநாடு உறுதியுடன் இத்தீர்மானங்கள் எடுக்கப்பட்டுள்ளது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக